உலகம்

பாகிஸ்தானில் தரையிறங்கிய இண்டிகோ விமானம்.. நடுவானில் நடந்த பரபரப்பு.. பின்னணி என்ன?

JananiGovindhan

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, நைஜீரியாவைச் சேர்ந்த பயணி திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்ததால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டிருக்கிறது.

டெல்லியில் இருந்து துபாயின் தோஹாவுக்கு பயணிக்கத் தொடங்கிய இண்டிகோ ஏர்லைன்ஸின் 6E-1736 விமானத்தில் நைஜீரியர் ஒருவரும் பயணித்திருக்கிறார். பாதி வழியில் விமானம் பறந்துக் கொண்டிருக்கும் போதே உடல்நலிவுற்ற நிலையில் இருந்த அந்த பயணி திடீரென நிலைக்குலைந்து போயிருக்கிறார்.

அவசரநிலை காரணமாக விமானத்தை தரையிறக்க வேண்டியதால் கராச்சி விமான நிலையத்தில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளரிடம் கேட்கப்பட்டதை அடுத்து அங்கு இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கராச்சி விமான நிலையத்தில் வைத்து பயணியின் உடல்நிலையை சோதித்ததில் அவர் இறந்ததை மருத்துவக் குழு உறுதிபடுத்தியது.

அப்துல்லா என்ற அந்த நபர், 60 வயது முதியவர் என அறியப்பட்டதோடு, விமானம் தரையிறங்கும் முன்பே அவர் இறந்துவிட்டார் என தெரியவந்திருக்கிறது. “இந்தச் செய்தியால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், எங்களது பிரார்த்தனைகளும் இரங்கலும் அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் உள்ளன.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து, விமானத்தின் மற்ற பயணிகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் தற்போது செய்து வருகிறோம்” என இண்டிகோ நிர்வாகம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அப்துல்லாவின் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடித்த பிறகு விமானம் தோஹா செல்லாமல் மீண்டும் டெல்லிக்கே திருப்பப்பட்டிருக்கிறது.