சமீபகாலமாக, உலகம் முழுவதும் விமானத்தில் ஏற்படும் அசெளகரியங்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சிறுநீர் கழிக்கும் விவகாரம், அவசர கதவு திறப்பு, பாலியல் தொந்தரவு, ஊழியர்களைத் தாக்குதல் எனப் பல்வேறு சம்பவங்களும், விமானத்தில் ஏற்படும் கோளாறுகளும் அதற்கு உதாரணமாய் உள்ளன. அந்த வகையில், பயணி ஒருவர் விமான ஊழியரின் கையைக் கடித்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானில் இருந்து 159 பயணிகளுடன் All Nippon Airways என்ற விமானம் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுள்ளது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இருந்த 55 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர் விமான ஊழியரின் கையைக் கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் காயம்பட்டதுடன் புகார் அளித்ததைத் தொடர்ந்து விமானம் உடனடியாக மீண்டும் டோக்கியோ விமான நிலையத்திற்கே திரும்பியது. விமான ஊழியரைக் கடித்த அந்த விமானி அதிக குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதேநேரத்தில், தாம் அவரைக் கடிக்கவில்லை என அவர் மறுத்துள்ளார். போதையில் இருந்ததால் அதுபற்றிய செயல் அவருக்கு ஞாபகம் இல்லாமல் இருந்ததாலேயே அப்படி கூறியுள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.