உலகம்

”பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகள் தன்பாலின ஈர்ப்பாளராக இருந்தால் ஆதரியுங்கள்”-போப் பிரான்சிஸ்

EllusamyKarthik

ஓரினச்சேர்க்கையாளர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர, அவர்களை கண்டிக்க கூடாது என தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ். வாட்டிகன் நகரில் தனது வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் ஆஃப் தி ரெக்காரடாக இதனை பேசியுள்ளார் போப். அந்த வகை பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் சந்திக்கும் சிக்கலின் போது இதனை அவர் சொல்லியுள்ளார். 

“தங்கள் பிள்ளைகளிடத்தில் மாறுபட்ட பாலியல் ஈர்ப்பை காணும் பெற்றோர்கள் அதனை எப்படி கையாள்வது, எப்படி அனுசரிப்பது என்பதுதான் அவசியம். மாறாக அவர்களை கண்டிக்கின்ற போக்கை கையாளக்கூடாது” என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 

“தேவாலயங்களில் ஒரே பாலின திருமணங்களை ஏற்க முடியாது. இருந்தாலும் அந்த தம்பதிகளுக்கு சுகாதாரம், ஓய்வூதியம், உரிமை மாதிரியான சிவில் யூனியன் சட்டங்களை ஆதரிக்க முடியும்” என சொல்லியுள்ளார் அவர். 

முன்னதாக ஓரினச்சேர்க்கையாளர்களை அவர்களது குடும்பத்தில் பிள்ளையாகவும், உடன் பிறந்தவர்களாகவும் ஏற்றுக் கொள்ளும் உரிமை உண்டு எனவும் சொல்லியிருந்தார். கடந்த ஆண்டு வாட்டிகன் கோட்பாட்டு அலுவலக கத்தோலிக்க பாதிரியார்கள் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆசீர்வதிக்க முடியாது என சொல்லி இருந்தனர். அது ஓரினச்சேர்க்கையாளர்கள் இடத்தில் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருந்தது. இருந்தாலும் அமெரிக்கா, ஜெர்மனி மாதிரியான நாடுகளில் பாதிரியார்கள் ஓரினச்சேர்க்கையாளர்களை ஆசீர்வதித்து வருகின்றனர் என சொல்லப்பட்டுள்ளது.