இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக போர் நடைபெற்ற நிலையில், இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. பணயக் கைதிகளில் சிலர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கொல்லப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இதனிடையே, போர் நிறுத்தத்தின் 2ஆம் கட்டம் அமல்படுத்தப்படவில்லை. எஞ்சிய பணயக் கைதிகளை உடனடியாக ஒப்படைக்கும்படி இஸ்ரேலும், காஸாவில் இருந்து வெளியேறும்படி ஹமாஸும் வலியுறுத்தியதால் 2ஆம் கட்ட போர் நிறுத்தம் தோல்வியடைந்தது. இதையடுத்து, காஸா முனை மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. அதேவேளை, காஸாவில் இருந்து இஸ்ரேல் மீதும் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இஸ்ரேலிலிருந்து சிறை பிடிக்கப்பட்டுள்ள மக்களை பிணைக்கைதிகளாகப் பார்க்க வேண்டிய அபாய நிலை உருவாகக்கூடும் என இஸ்ரேல் அரசுக்கு ஹமாஸ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே, காஸாவில் வசிக்கும் மக்களில் ஒரு பகுதியினர் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக திரும்பி உள்ளனர். வடக்கு காஸாவின் பல்வேறு பகுதிகளில், “காஸாவை விட்டு ஹமாஸ் அமைப்பினர் வெளியேற வேண்டும்” என வலுவான கோரிக்கையை வைத்துப் மக்கள் போராடி வருகின்றனர். 'போரை நிறுத்து', 'போரை முடிவுக்குக் கொண்டு வா', 'நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்க விரும்பவில்லை', 'எங்கள் குழந்தைகளின் ரத்தம் மலிவானது அல்ல', ஹமாஸே வெளியேறு’ என்ற பல்வேறு பதாகைகளையும் வைத்து அவர்கள் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.
17 மாதங்களுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரில், காஸாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.