உலகம்

" நான் ஒரு பாகிஸ்தானி, புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்" பாகிஸ்தான் பெண்கள்

webteam

புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் பெண்கள் சமூக வலைதளங்களில் #AntiHateChallenge என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த 14-ஆம் தேதி, நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு வழங்கிய வர்த்தக ரீதியிலான அனுகூலமான நாடு என்ற அந்தஸ்தை இந்தியா திரும்ப பெற்றது. 

காஷ்மீர் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்துகொண்டு இருப்பதாகவும், தாக்குதலுக்கு எதிரிகள் நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டுமென்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்தார். தாக்குதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தத் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் எனத் தெரிவித்தார். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் இடையே ஒருவித பதட்ட நிலையே நிலவி வருகிறது. 

இந்நிலையில் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தான் பெண்கள் சமூக வலைதளங்களில் #AntiHateChallenge என்ற ஹேஸ்டேக்கை பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் பத்திரிகையாளரான ஷேய்ர் மிர்ஷா தொடங்கிய இந்த ஹேஸ்டேக் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இது குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஷேய்ர் மிர்ஷா, இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனதளவில் தொந்தரவு செய்கிறது. தீவிரவாதத்துக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். #AntiHateChallenge என்பது தாக்குதலுக்கான கண்டனம் மட்டுமல்ல, இது இந்திய நண்பர்களுக்கான ஆதரவு. இந்த பிரசாரத்தில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். போர் எங்கு நடந்தாலும் அது உலக அமைதியை குலைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

ஷேய்ர் மிர்ஷாவின் #AntiHateChallenge ஹேஸ்டேக்குக்கு பல பெண்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நான் ஒரு பாகிஸ்தானி. நான் புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் என்று எழுதப்பட்ட பாதகைகளுடன் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.