உலகம்

சிறுவனின் கன்னத்தில் அறைந்த பெண் நிருபர்: என்ன காரணம்? - வைரல் வீடியோ

JustinDurai

பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேமரா முன்பு செய்தி வழங்கிக்கொண்டிருந்தபோது திடீரென்று அருகில் நின்ற சிறுவனின் கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் தொடர்பான செய்தியை களத்திலிருந்து வழங்கிக் கொண்டிருந்தார். கேமரா முன்பு அந்த பெண் நிருபர் சீரியசாக செய்தியை விவரித்துக் கொண்டிருக்க, அவரைச் சுற்றி சிறுவர்கள் உள்ளிட்ட பலர் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் சிறுவன் ஒருவன் நிருபருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் குசுகுசுவென்று பேசிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த அந்த பெண் நிருபர் கேமரா முன்பு பேசிக்கொண்டிருக்கும் போதே சிறுவனின் கன்னத்தில் பளாரென அறைந்தார்.

சிறுவனை அறைந்த காட்சி அவர் செய்தி வழங்கிக்கொண்டிருந்த கேமராவில் பதிவாகிவிட, அது எப்படியோ இணையத்தில் வெளியாகிவிட்டது. அந்த வீடியோதான் இப்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.