உலகம்

பாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்

பாக்., கல்லூரி விடுதியில் இந்து மாணவி சடலமாக மீட்பு: கொலை என உறவினர்கள் புகார்

webteam

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தன் அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பாகிஸ்தானின்  கோட்கி டவுன் பகுதியில் உள்ள மருத்துவக்கல்லூரியில் படித்து வந்தவர் இந்து மாணவி நம்ரிதா சந்தனி. இவர் தனது விடுதி அறையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். நம்ரிதா தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விடுதி அறையில் துப்பட்டா மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் நம்ரிதா சந்தனி தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பு இல்லை என்றும் இது கொலையாகத்தான் இருக்குமென்றும் மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பேசிய மாணவியின் சகோதரர்,இது தற்கொலை அல்ல. தற்கொலைக்காக தடயங்கள் வேறு மாதிரி இருக்கும். ஆனால் வயரால் இறுக்கப்பட்டது போல கழுத்தைச் சுற்றி தடயம் உள்ளது. கைகளிலும் தடயம் உள்ளது. இது வயரால் இறுக்கப்பட்ட தடயம்.ஆனால்  துப்பட்டாவால் தற்கொலை செய்துகொண்டதாக கூறுகிறார்கள். இந்த விவகாரத்தில் போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின்  கோட்கி டவுன் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மதமாற்றம் செய்ய முற்பட்டதாக இந்து மதத்தைச் சேர்ந்த பள்ளி முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்து கோவில் ஒன்று சூறையாடப்பட்டது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள்ளேயே கல்லூரி மாணவியின் உயிரிழப்பு மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது