மத்திய கிழக்கில் நிலவிவரும் அமெரிக்கா - ஈரான் இடையேயான தொடர் பதற்றத்திற்கு மத்தியில், சவூதி அரேபியா, பாகிஸ்தான், துருக்கி ஆகிய நாடுகள் இடையே கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் (Makkah Joint Defence Agreement) எனக் கூறப்படும் இந்த ஒப்பந்தம், இன்று (ஆக.7) சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் கையெழுத்தானது. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்டோகன் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோர் கூட்டாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கடந்தாண்டு சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், தற்போது துருக்கியும் இணைந்து இது ஒரு முத்தரப்பு கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடுகளும் தமக்கென ஒரு தனித்துவமான பலத்தைக் கொண்டுள்ள ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. அதாவது, சவூதி அரேபியாவின் பொருளாதார வலிமை, துருக்கியின் மேம்பட்ட இராணுவத் தொழில்நுட்பம் மற்றும் பாகிஸ்தானின் அணுஆயுத திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு புதிய பிராந்தியக் கூட்டணியாகப் பார்க்கப்படுகிறது. இதன்மூலம் மூன்று நாடுகளில் எந்த நாடுமீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அவை மூன்று நாடுகள்மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாக கருதப்படும் என்ற நேட்டோ (NATO) பாணியிலான பாதுகாப்பு விதி இதில் இடம்பெற்றுள்ளது.
அதாவது, ஒருநாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில், மற்ற நாடுகள் தங்களின் கூட்டுப் பாதுகாப்பு பலத்தைப் பயன்படுத்தி அதற்குப் பதிலடி கொடுக்கவோ அல்லது உதவவோ முன்வரும் என அறிவுறுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் மூன்று நாடுகளும், கூட்டு இராணுவப் பயிற்சிகள், புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல், பாதுகாப்புத் தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் தளவாடங்கள் உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள், கப்பல் போக்குவரத்து அச்சுறுத்தல்கள் மற்றும் பிராந்தியப் பாதுகாப்புச் சவால்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த ஒப்பந்தம் தொடர்பாக அனைத்து நிகழ்வுகளையும் உற்றுநோக்கி வருவதாக இந்திய அரசாங்கம் கருத்து தெரிவித்துள்ளது.