இஸ்லாமிய பெயர்களுக்கு பதில் இந்து பெயர்கள் Pt web
உலகம்

இஸ்லாமிய பெயர்களுக்கு பதில் இந்துப் பெயர்கள்.. பாகிஸ்தானின் அதிரடி முடிவு! காரணம் என்ன?

பாகிஸ்தானின் பஞ்சாப் அரசு, லாகூரில் உள்ள தெருக்கள் மற்றும் பகுதிகளுக்கு இஸ்லாமிய பெயர்களுக்குப் பதிலாக சுதந்திரத்திற்கு முன் இருந்த இந்து பெயர்களை மீண்டும் வழங்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

PT WEB

இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தானின் முக்கிய நகரமான லாகூரில் சாலைகளுக்கு இந்து பெயர்கள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன் அழைக்கப்பட்ட பெயர்களை மீண்டும் பயன்படுத்தி வரலாற்று சிறப்புகளை தொடர்ந்து கடைபிடிக்கும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெயர்களுக்கு பதில் இந்து பெயர்கள்

கடந்த இரண்டு மாதங்களில், குறைந்தது ஒன்பது இடங்களுக்கு ஏற்கனவே மறுபெயரிடப்பட்டுள்ளது. இஸ்லாம்புரா என்ற பகுதி கிருஷ்ணா நகர் என மாற்றப்பட்டுள்ளது. முஸ்தஃபா பாத் என்ற பகுதி தர்மபுரா என மாற்றப்பட்டுள்ளது. பாப்ரி மஸ்ஜித் சவுக் என்ற பகுதி ஜெய்ன் மந்திர் சவுக் என இனி அழைக்கப்பட உள்ளது. மவுலானா ஜாஃபர் அலிகான் சவுக் என்ற பகுதி லட்சுமி சவுக் என மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்று 9 பகுதிகள், சாலைகள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

பெயர் மாற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார்?

இந்த பெயர் மாற்றத் திட்டம், பாகிஸ்தானின் பஞ்சாப் அரசாங்கத்தின் லாகூர் பாரம்பரியப் பகுதி புதுபித்தல் (LHAR) என்ற மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டம், நாட்டின் கலாச்சாரத் தலைநகரை அதன் பிரிவினைக்கு முந்தைய பாரம்பரிய நிலைக்கு மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் லட்சியமிக்க கனவுத் திட்டம் ஆகும்.

Nawaz Sharif & Maryam Nawaz

2025-ல் ஷெரீப் மற்றும் அவரது மகளும், பஞ்சாப் மாகாணத்தின் தற்போதைய முதலமைச்சருமான மரியம் நவாஸ் ஆகியோரால் இது தொடங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகளைப் போலவே, பாகிஸ்தானும் தனது நகரங்களின் வரலாற்றுப் பாரம்பரியத்தை அழிப்பதற்குப் பதிலாகப் பாதுகாக்க வேண்டும் என்று அந்த அரசாங்கம் கூறுகிறது. பாரம்பரியச் சுற்றுலாவை ஊக்குவிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு வருவாய் ஈட்டுவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

பெயர் மாற்றத்தின் உண்மையான காரணம்

பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின், குறிப்பாக இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் நிலை மிகுந்த கவலைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது . அவர்களை ஒடுக்குதல், கட்டாய மதமாற்றம், அவர்களின் சொத்துக்கள் மீதான ஆக்கிரமிப்பு மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்களை இடித்தல் போன்ற சம்பவங்கள் அச்சமூட்டும் வகையில் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது.

Lahore, Pakistan

பழைய பெயர்களை மீட்டெடுப்பதன் மூலம், பாகிஸ்தான் தனது தீவிரவாதப் பிம்பத்தை உதறிவிட்டு, சகிப்புத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பன்முக கலாச்சாரம் கொண்ட ஒரு நாடாக பரிணமித்து வருவதை உலக சமூகத்திற்கும், குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கும் நிரூபிக்க முயல்கிறது. இதன் மூலம், தூதரக மற்றும் பொருளாதார உதவிகளைப் பெறுவதை எளிதாக்குகிறது.

இஸ்லாமிய மயமாக்கலால் வடிவமைக்கப்பட்ட பாகிஸ்தானில் இந்த பெயர் மாற்றம் கிட்டத்தட்ட எந்தவொரு எதிர்ப்பும் இன்றியே நடந்துள்ளது என்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.