பாகிஸ்தானில் பெண் நிருபர் ஒருவர் நேரடி ஒளிபரப்பின் போது மயக்கமடைந்து சுருண்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் பி.டி.ஐ கட்சியின் பெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதை நேரடியாக பல சேனல்கள் ஒளிபரப்பின. அப்போது, சேனல் ஒன்றின் நிருபர் இர்ஷா கான் என்ற பெண்ணும் அங்கு இருந்தார். கூட்டம் தொடர்பான தகவல்களை கிரேன் ஒன்றில் மீது ஏறி அமர்ந்தபடி நேரலையாக வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவர் கண்கள் மேலே சொருகின. மைக் மெதுமெதுவாக கீழே விழ, திடீரென்று மயங்கி மேலிருந்து விழுந்தார். அவர் விழுவதைக் கண்டதும் கீழே கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் தாங்கிப் பிடித்தனர். இருந்தாலும் தரையில் விழுந்துவிட்டார் இர்ஷா. அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.