பாகிஸ்தான் அதிபர் ஷாபாஸ் ஷெரீப், உலக நாடுகளிடம் கடன் கேட்டு பிச்சை எடுத்தது அவமானகரமானது எனக் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான், அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முடியாமல் திணறி, பல்வேறு நாடுகளிடமும் நிதி உதவி கோரியது. இதனால், பாகிஸ்தான் திவால் ஆகும் நிலை ஏற்பட்டது.
செய்தியாளர் - பிரவீன் ஜோஷ்வா
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா பெரும் தொற்று காரணமாக உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதில் இருந்து உலகம் மீண்டு வந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா போர் ஆரம்பமாகி மீண்டும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை அதிகரித்தது.
அதிலும், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்த பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கப்பட்டது. அந்த நாட்டில் அடிப்படை உணவுக்கே பற்றாக்குறை ஏற்பட்டதால், பல இடங்களில் கோதுமைக்காக பொதுமக்கள் ஒருவரை ஒருவரை அடித்துக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.
போதிய வரி வருவாய் இல்லாத நிலையில், மக்களின் அடிப்படை தேவைகளை பாகிஸ்தான் அரசால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் திவால் ஆகும் சூழல் ஏற்பட்டதால் அந்நாடு பல்வேறு நாடுகளிடமும், உலக வங்கி போன்ற அமைப்புகளிடமும் நிதி வழங்கக் கோரியது.
இதனிடையே பல்வேறு நிபந்தனைகளை விதித்து ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு பல்வேறு நிதியுதவிகளை வழங்கியது. இது குறித்து இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் அதிபர் ஷாபாஸ் ஷெரீப், தளபதி ஆசிம் முனிரும் நானும் உலகெங்கிலும் சென்று கடன் கேட்டு பிச்சை எடுத்ததாகவும், வெளிநாட்டுக் கடன்களை பாகிஸ்தான் அதிகளவில் சார்ந்திருப்பது அவமானகரமானது என்றும் கூறினார்.
மேலும், கடன் வாங்குவது நமது சுயமரியாதைக்கு ஒரு பெரிய சுமையாகும். பணம் கேட்கும்போது எனது தலை மற்றும் தளபதி ஆசிம் முனிரின் தலை வெட்கத்தால் குனிந்தே இருந்தது என்றும், கடினமான காலங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்ற பாகிஸ்தானின் முக்கிய நட்பு நாடுகளான சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை நன்றியோடு நினைவு கூர்வதாகவும் பேசியுள்ளார்.