அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல், பாகிஸ்தானை ஓர் அடிமை நாடாகக் குறைக்க சியோனிஸ்டுகளால் திட்டமிடப்பட்டதாக அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளார். தவிர, இந்தியா மீதும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நடத்தும் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகள் பதற்றத்தில் உள்ளன. தவிர, உலக நாடுகளும் அச்சத்தில் உறைந்துள்ளன. இந்தப் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிடையேயும் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ”பாகிஸ்தானை ஓர் அடிமை நாடாகக் குறைக்க சியோனிஸ்டுகளால் திட்டமிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “யூத தாயகத்தை நிறுவுவதற்கும் பாதுகாப்பதற்கும் இயக்கத்தைக் குறிப்பிடும் சியோனிசம், 1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து இஸ்லாமிய உலகைப் பாதிக்கும் அனைத்து மோதல்களிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்கைக் கொண்டிருந்தது. முஸ்லிம் உலகில் எந்தவொரு பெரிய அளவிலான மோதலிலும் சியோனிச சித்தாந்தம் உந்து சக்தியாக இருந்தது. பெரிய உலகளாவிய சக்திகள் சியோனிசத்தால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டனர். பல தசாப்தங்களாக உலகப் பொருளாதாரத்தின் போக்கை ஆணையிடுபவர்கள் சியோனிஸ்டுகள்” எனக் குறிப்பிட்ட கவாஜா, அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் மோதல் குறித்தும் கருத்து தெரிவித்தார்.
“ஈரான் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்த போதிலும், அவர்கள் மீது ஒரு போர் திணிக்கப்பட்டுள்ளது. இந்தப் போர், பாகிஸ்தானின் எல்லைகளை நோக்கி இஸ்ரேலின் செல்வாக்கை விரிவுபடுத்தும் வெளிப்படையான நோக்கத்துடன் சியோனிஸ்டுகளால் திட்டமிடப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “இஸ்ரேல் வெற்றி பெற்றால், அது இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு எதிரான பகைமையை, கூட்டு ஒற்றைப் புள்ளி நிகழ்ச்சி நிரலை ஏற்றுக்கொள்ள வழிவகுக்கும். இது, நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பற்றதாக்கி, எல்லாப் பக்கங்களிலிருந்தும் எதிரிகளால் நம்மைச் சூழ்ந்து, பாகிஸ்தானை ஓர் அடிமை நாடாக மாற்றும். எனினும், நமது ஆயுதப்படைகளின் வலிமை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது” என எச்சரித்த அவர், ”பாலஸ்தீனம் சுதந்திரமாகட்டும்" என்கிற கருத்தையும் அவர் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான், ஈரானுடன் 900 கி.மீ நீள எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. அதேநேரத்தில் ஈரான், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஓர் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இது பல தசாப்தங்களாக கிளர்ச்சியின் மையமாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.