”விரக்தியடைந்த இளைஞர்கள் ஒன்றுபட்டால் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட முடியும். இஸ்லாமியக் குடியரசில் சி.ஜே.பி. போராட்டத்தைப் போன்ற ஒரு போராட்டம் வெடிக்கும்” என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி எச்சரித்துள்ளார்.
இப்போதெல்லாம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது, Gen Z தலைமுறை. கடந்த ஐந்து ஆண்டுகளில் உலக அரசியலில் Gen Z தலைமுறை ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த இளைஞர் இயக்கம், பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்த தலைமுறையைக் குறிக்கிறது. இவர்களின் இயக்கங்கள் பெரும்பாலும் வேலைவாய்ப்பு, ஊழல், ஜனநாயகம், கல்வி, வாழ்வாதாரம் மற்றும் அரசின் பொறுப்புணர்வு போன்ற கோரிக்கைகளை மையமாகக் கொண்டவை. சமூக ஊடகங்களுடன் வளர்ந்த இந்த தலைமுறை, கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளில் அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய சக்தியாக மாறியுள்ளது.
குறிப்பாக இவர்களின் போராட்டங்கள் வங்கதேசம், இலங்கை, நேபாளம், செர்பியா, கென்யா, சிலி உள்ளிட்ட நாடுகளில் கடந்த காலத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது. உலகத்தை உலுக்கிய இந்த இயக்கங்கள், இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. சமீபத்தில், டெல்லியில் CJP நடத்திய போராட்டத்தில் இணைந்த இந்தக் குழுவினர், இந்திய அரசுக்கு பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்தனர். இதனால், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியிலிருந்து விலகினார்.
இந்தச் சூழலில், பொருளாதார நெருக்கடி இருந்தபோதும் அண்டை நாடான பாகிஸ்தானில் ஒருங்கிணைந்த Gen Z இயக்கம் உருவாகவில்லை என்பது தற்போது பேசுபொருளாகி உள்ளது. இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ”கரப்பான் பூச்சிகளால் எல்லாவற்றையும் புரட்டிப் போட முடியும்” என பாகிஸ்தான் அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருப்பது உலகை அதிரவைத்துள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, “பாகிஸ்தானின் ஆட்சி அமைப்பை அரசியல்வாதிகள் சீர்திருத்தாவிட்டால், பாதுகாப்புப் படைத் தலைவர் (சிடிஎஃப்) ஆசிம் முனீரின் முயற்சிகள் நீடித்த பலன்களைத் தராது. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைப்புமுறை சரிந்துவிட்டது.
இதன்மூலம் பிரச்னைகளைத் தீர்க்க முடியாது. கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால், இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகும் பாகிஸ்தான் இதே பிரச்னைகளைப் பற்றியே விவாதித்துக் கொண்டிருக்கும். இப்போது, நீங்கள் அந்த இளைஞரை இளைஞர் என்றோ, கரப்பான் பூச்சி என்றோ அல்லது வேறு எப்படியாவது அழைத்தாலும் சரி... இந்தக் கரப்பான் பூச்சிகள் ஒன்று சேர்ந்தால், அவர்களால் எல்லாவற்றையும் தலைகீழாகப் புரட்டிப் போட முடியும்" என்று அவர் கூறியதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்திய போராட்டம் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவுக்கு வழிவகுத்த நிலையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.