உலகம்

இலங்கையை தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பாகிஸ்தான்!

ச. முத்துகிருஷ்ணன்

இலங்கையை தொடர்ந்து இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க பாகிஸ்தான் சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை கடன் வாங்கியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 18 ஆயிரம் கோடியை கடனாக வாங்கியுள்ளது பாகிஸ்தான் அரசு.

குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு, அதிகரித்து வரும் கடன், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இந்நிலையில், சீனாவிடமிருந்து 2.3 பில்லியன் அமெரிக்க டாலரை கடனாக பெற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக அந்நாட்டு நிதியமைச்சர் இஸ்மாயில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சீன வங்கிகள் கூட்டமைப்பு இன்று பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஒப்புக்கொண்டதால் கடன் பத்திரத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் இந்த பணம் பாகிஸ்தான் வந்து சேரும் என்றும் இதற்காக சீன அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் பாகிஸ்தான் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அறிவித்துள்ள பெரும் மானியங்களைத் திரும்பப் பெறாமல் இருப்பதில் குறியாக உள்ளது, இது மிகவும் தேவையான சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆதரவை நிறுத்தும் அபாயத்தில் உள்ளது. கடினமான ஆனால் இன்றியமையாத கட்டமைப்பு சீர்திருத்த நடவடிக்கைகளைத் தவிர்ப்பது மற்றும் நிதி உதவி மற்றும் ஆதரவிற்காக IMF மற்றும் அதன் ஆதரவுத் திட்டத்தின் திறனைக் குறைப்பதில் இலங்கை செய்த அதே தவறை பாகிஸ்தான் மீண்டும் செய்து வருவதாக வல்லுநர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.