உலகம்

5000 தீவிரவாத அமைப்புகளின் வங்கி கணக்குகளை முடக்கி பாகிஸ்தான் அதிரடி

webteam

பாகிஸ்தானின் பல்வேறு வங்கிகளில் இருந்த 5000 தீவிரவாத அமைப்புகளின் கணக்குகளை முடக்கி அந்நாட்டு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

பாகிஸ்தானில் வெளிப்படையாக செயல்படும் தீவிரவாத அமைப்புகள், பெயர் மாற்றி புது பெயரில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் என சுமார் 5000 அமைப்புகளின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு ஆணையம் முடக்கி உள்ளது. இந்த வங்கி கணக்குகளில் ரூ.19,200 கோடி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் நிதி நடவடிக்கை அதிரடிப்படை என்ற ஒரு அமைப்பு தொடங்கப்பட்டது. அமெரிக்காவில் கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, தீவிரவாத அமைப்புக்கு செல்லும் நிதியையும் இந்த அமைப்பு கண்காணித்து வருகிறது. ஒரு நாட்டில் உள்ள வங்கிகளில் தீவிரவாத அமைப்புகளின் கணக்குகள் அதிக அளவில் இயங்கும் நிலையில் அவையும் இந்தப் பட்டியலில் இடம் பெறும்.
 
இந்த அமைப்பு அடுத்த மாதம் ஸ்பெயின் நாட்டில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்த கூட்டத்தில் தீவிரவாத அமைப்புகளுக்கு சட்டவிரோதமாக செல்லும் நிதி குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் தீவிரவாத அமைப்புகளின் கணக்கு இருப்பது இந்தப் பட்டியலில் இடம் பெற்றால், பாகிஸ்தான் பிற நாடுகளிடமிருந்து கடன் வாங்குவது பாதிக்கப்படும். எனவே பாகிஸ்தான் தற்போது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.