உலகம்

“பிரதமர் மோடி வான்வெளி செல்ல அனுமதித்தோம்” - பாகிஸ்தான் தகவல்

webteam

இந்தியப் பிரதமர் மோடி வான்வெளி பயணம் செல்வதற்கு தாங்கள் அனுமதி அளித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானின் பால்கோட் பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் வான்பரப்பில் பறக்க பாகிஸ்தான் தடை விதித்தது. அந்தத் தடையை வரும் 15ஆம் தேதி வரை சமீபத்தில் நீட்டித்தது. 

இந்நிலையில் வரும் 13ஆம் தேதி பிரதமர் மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்க விமானம் மூலம் கிர்கிஸ்தானுக்கு செல்ல இருக்கிறார். பாகிஸ்தான் வழியே சென்றால் 4 மணி நேரத்தில் கிர்கிஸ்தானை அடையலாம். வேறு வழியில் சென்றால் 8 மணி நேரம் ஆகும். எனவே பிரதமர் செல்லும் விமானத்துக்கு பாகிஸ்தான் வான்பரப்பில் அனுமதி அளிக்க வேண்டும் என இந்தியா கேட்டுக்கொண்டது.

இந்தியாவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மோடி செல்லும் விமானம் செல்ல அந்நாட்டு அரசு அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அனுமதி ஏற்கப்பட்டதை அந்நாட்டு அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் வான்வெளி வழியாக கிர்கிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் மோடி பயணிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தான் வழியாக செல்ல மாட்டோம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விளக்கமளித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம், “இந்திய பிரதமர் மோடி மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் செல்ல 2 பாதைகள் வேண்டும் என அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தது. உரிய நடவடிக்கைகளுக்குப் பிறகு நாங்கள் இன்று காலை அதற்கு ஒப்புதல் கொடுத்தோம். அதேசமயம் பாதையில் செல்வது என்பதை இந்தியாவே முடிவு செய்யட்டும்” என்று தெரிவித்துள்ளது.