ஆசிம் முனீர் X
உலகம்

பாகிஸ்தான் ராணுவ தளபதி தெஹ்ரான் பயணம்.. ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தடைபட்டுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து உயர்மட்ட ஆலோசனைகளை நடத்த, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் இன்று ஈரான் சென்றடைந்துள்ளார்.

Premkumar S

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே 1 மாதத்திற்கு மேலாக போர் தொடர்ந்து வந்த நிலையில், உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கியது. இதனால், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில்தான், ஹார்முஸை முழுமையாக திறக்க வேண்டும். அணு ஆயுத பயன்பாட்டைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அமெரிக்கா ஈரானிடம் வலியுறுத்தி வந்தது. இதனை, ஈரான் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், மத்தியக் கிழக்கில் தொடர்ந்து போர் நடைபெற்று வந்தது.

ஈரான், அமெரிக்கா

இந்த சூழலில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் ஈரான் -அமெரிக்கா இடையேயான போர் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்றது. 20 மணிநேரத்திற்கு மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையிலும், எந்தவொரு ஒப்பந்தமும் ஏற்படாமலேயே இருநாடுகளின் பிரதிநிதிகளும் நாடு திரும்பினார்.

இதனால், மத்தியக் கிழக்கில் போரின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில்தான், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே தடைபட்டுள்ள பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து உயர்மட்ட ஆலோசனைகளை நடத்த, பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் இன்று ஈரான் சென்றடைந்துள்ளார். பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையே நீடிக்கும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, இராஜதந்திர உறவை மீண்டும் நிலைநாட்ட பாகிஸ்தான் ஒரு பாலமாகச் செயல்பட்டு வரும் நிலையில், இப்பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

அசிம் முனீர்

ஈரான் தலைவர்களுடனான இந்தச் சந்திப்பில், ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு, அணுசக்தி ஒப்பந்தங்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பாகிஸ்தான் ராணுவ தளபதியின் வருகையை, அமெரிக்காவுடனான அடுத்தகட்ட நகர்வுகளுக்கு முக்கியமானது என ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.