சிங்கப்பூரில் இன்று ஒரே நாளில் 940-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதிகளில் தங்கியிருந்து பணியாற்றும் தொழிலாளர்கள் என தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளில் தெற்காசியாவில் இருந்து சென்ற சுமார் 3 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் அடுக்கடுக்காக கட்டப்பட்ட dormitories என்று அழைக்கப்படும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அந்த தொழிலாளர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் மூலம் இன்று ஒரே நாளில் 940-க்கும் மேற்பட்டோர் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று கண்டறியப்பட்ட விடுதிகள் அனைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை கொரோனா பெருந்தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.