சுசீர் பாலாஜி எக்ஸ் தளம்
உலகம்

அமெரிக்கா | OpenAIக்கு எதிராக குரல் எழுப்பிய இந்தியர் மர்ம மரணம்.. விசாரணை கோரும் பெற்றோர்!

சுசிர் பாலாஜி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தாய் பூர்ணிமா ராமராவ் கூறியுள்ளார் .

Prakash J

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 2021இல் கணினி அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்ற இந்தியாவை சேர்ந்த சுசீர் பாலாஜி (26), அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப (OpenAI) நிறுவனத்தில், கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். மேலும், ChatGPT-யை உருவாக்கிய குழுவில் முக்கிய அங்கமாக இருந்துள்ளார். இதுதவிர WebGPT மற்றும் GPT-4 போன்ற பிற திட்டங்களிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்த நிலையில், அந்தப் பணியில் இருந்து வெளியேறிய அவர் கடந்த அக்டோபர் மாதம், ‘தி நியூயார்க் டைம்ஸ்’க்கு பேட்டியளித்திருந்தார். அதில், காப்புரிமை தரவை OpenAI நிறுவனம் அனுமதியின்றி பயன்படுத்தியாகக் குற்றம்சாட்டியிருந்தார். தொடர்ந்து இதுதொடர்பாகப் பதிவுகளையும் வெளியிட்டு வந்தார். ஊடகம் ஒன்றில் பேட்டியும் அளித்திருந்தார்.

சுசீர் பாலாஜி

இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் உள்ள தனது வீட்டில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த விசாரணையில், அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், இந்த மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். சுசீர் பாலாஜியின் மரணம் குறித்து, ஸ்பேஸ்எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க், அதிருப்தி தெரிவித்திருந்தார்.

செயற்கை நுண்ணறிவுத்துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்திற்கு சுசிர் பாலாஜியின் ஆய்வுகளும் ஒரு காரணமாக இருந்த நிலையிலும் ஓபன் ஏஐ குறித்த ரகசியங்களை வெளியிட இருந்த நிலையிலும் நேர்ந்த அவரது மரணம் தொழில்நுட்ப உலகில் சலசலப்புகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தன் மகன் சுசிர் பாலாஜி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார் தாய் பூர்ணிமா ராமராவ். சுசிர் பாலாஜியின் மரணத்திற்குப் பிறகு, நவம்பர் 29ஆம் தேதி Google Drive மற்றும் Chrome-ல் அவரது பெயரில் பணிக்கோப்புகள் உருவாக்கப்பட்டிருந்தது என்றும் பூர்ணிமா கேள்வி எழுப்பியுள்ளார். தனது மகனின் அறை அலங்கோலமாக இருந்ததையும் குளியலறையில் ஏதோ போராட்டம் நடந்திருப்பதற்கு அறிகுறியாக ரத்தக்கறைகள் காணப்பட்டதாகவும் பூர்ணிமா தெரிவித்துள்ளார். இது எல்லாவற்றையும்விட தனியார் மருத்துவர்களை கொண்டு மகனின் உடலில் பரிசோதனை மேற்கொண்டதாகவும் அவர்கள் அளித்த அறிக்கை, காவல்துறையின் அறிக்கைக்கு முரணாக இருந்தது என்றும் பூர்ணிமா கூறியுள்ளார்.

பெற்றோருடன் சுசீர் பாலாஜி

தன்னம்பிக்கை ததும்பும் தன் மகன் நிச்சயம் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் என்றும் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார் இந்த இறப்பு குறித்து சுயாதீனமான விசாரணை நடத்த வேண்டும் என அவரது பெற்றோர் வலியுறுத்துகின்றனர். சுசிர் பாலாஜி குறித்த அவரது தாயின் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், இது தற்கொலை போல் தோன்றவில்லை என கூறியுள்ளார். ஏஐ தொழில்நுட்ப உலகின் மிகப்பெரிய முறைகேடுகளை அம்பலப்படுத்த முனைந்த இந்திய இளைஞரின் மரணம் தொடர்பான முறையான விசாரணை நடைபெற்று ரகசியங்கள் வெளிச்சத்திற்கு வந்தால் அது தொழில்நுட்ப உலகில் புயலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது