பண்பலை அலைவரிசை வானொலி எனும் எஃப்.எம். ரேடியோ சேவையை நிறுத்த நார்வே அரசு முடிவு செய்துள்ளது.
டிஜிட்டல் ரேடியோ ஒலிபரப்புக்கு மாறும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக நார்வே அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. கடந்த 1950களிலிருந்து பயன்பாட்டில் இருந்து வரும் பண்பலை வானொலி சேவையை நடப்பு 2017ம் ஆண்டில் முழுமையாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக போடோ நகரில் வரும் 11ம் தேதி முதல் அனைத்து எஃப்.எம் ரேடியோ சேவைகளும் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பாலான கார்களில் டிஜிட்டல் ரிசீவர்கள் பொருத்தப்படாத நிலையில், இதனால் பல்வேறு அவசர அறிவிப்புகளை மக்களுக்கு கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். அரசின் இந்த முடிவிற்கு 66 சதவீத மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், 17 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.
நார்வேயைப் போலவே பண்பலை வானொலி சேவைகளை நிறுத்தும் திட்டத்தை இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளன.