உலகம்

"இந்தியர்கள் சுயமரியாதை உடையவர்கள்"- இந்தியாவை புகழ்ந்த இம்ரான் கான்

Veeramani

இந்திய வெளியுறவுக் கொள்கைகளில் எந்த நாடும் கட்டளையிடும் சூழல் இல்லை என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த அந்நாட்டு அதிபரின் உத்தரவு செல்லாது என்றும், நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை இம்ரான் கான் அரசு சந்திக்க வேண்டும் என்றும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்றிரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான், தான் நீதித்துறையை மதிக்கும் அதேநேரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வருத்தமளிப்பதாக கூறினார். எதிர்க்கட்சிகள் குதிரைப் பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் எந்த நாடும் கட்டளையிடுவதில்லை என்று கூறிய பிரதமர் இம்ரான் கான், இந்தியர்கள் சுயமரியாதை உடையவர்கள் என்றும் புகழாரம் சூட்டினார்.



மேலும், எந்த வல்லரசு நாடுகளாலும் இந்தியாவுக்கு ஆணையிட முடியாத நிலை உள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். ஆனால் ஆட்சிக்கட்டிலில் இருந்து தன்னை அகற்ற அமெரிக்கா துடிப்பதாக குற்றம்சாட்டிய இம்ரான் கான், சர்வதேச சதிகளால் பாகிஸ்தானின் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்தார். அமெரிக்காவால் இறக்குமதி செய்யப்பட்ட அரசை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறிய இம்ரான் கான், மக்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.