உலகம்

நேபாள சுற்றுலாத்துறை அமைச்சர் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

webteam

நேபாள சுற்றுலா துறை அமைச்சர் ரபிந்திர அதிகாரி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நேபாள சுற்றுலா துறை அமைச்சர் ரபிந்திர அதிகாரி மற்றும் நேபாள அரசு அதிகாரிகள் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டிருந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திபாரா கோவிலை சென்று பார்த்துவிட்டு பின்னர் பஞ்சதார் பகுதியில் நடைபெற்றுவரும் விமான நிலைய பணிகளை பார்வையிட சென்றனர்.

இந்நிலையில் அவர்களின் ஹெலிகாப்டர் பத்திபாரா கோவிலுக்கு சென்றுவிட்டு காத்மண்டு திரும்பிய போது விபத்தில் சிக்கியுள்ளது. இந்த பரிதாப விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஏழு பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து நேபாள நாட்டின் விமானத்துறையின் செய்திதொடர்பாளர் பாபு திவாரி, “இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த ஏழு பேரும் உயிரிழந்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

மேலும் விபத்து குறித்து அப்பகுதி மக்கள் “முதலில் ஒரு பயங்கர சத்தம் கேட்டது. அதன் பின்னர் அப்பகுதி முழுவதும் நெருப்பு மற்றும் புகை மண்டலத்தால் சூழப்பட்டது” எனத் தெரிவித்தனர்.