பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃபின் மனைவி பேகம் குல்சூம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.
பனாமா கேட் ஊழல் வழக்கில் நவாஸ் செரீப் தனது பிரதமர் பதவியை இழந்தார். அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து காலியான நவாஸ் செரீப்பின் லாகூர் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. அதில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி சார்பில் நவாஸ் செரீப்பின் மனைவி குல்சூம் நவாஸ் போட்டியிட்டார். முன்னாள் கிரிக்கெட் விரர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்த யாஸ்மின் ரசீதும் இத்தேர்தலில் போட்டியிட்டார்.
குல்சூம், இம்ரான்கான் கட்சி வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது. முடிவில், நவாஸ் ஷெரிஃபின் மனைவி பேகம் குல்சூம் 13 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இம்ரான்கான் கட்சி வேட்பாளரை தோற்கடித்தார். குல்கம் 59,413 வாக்குகளும், யாஸ்மின் ரசீத் 46,145 வாக்குகளும் பெற்றனர். கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நவாஸ் ஷெரீப் யாஸ்மின் ரசீதை 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
முன்னதாக நவாஸ் ஷெரீப் தனக்கு பதில் தன் மனைவியை பிரதமராக்க திட்டமிட்டுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. நவாசுக்கு பதில் அப்பாஸி தற்காலிக பிரதமராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.