நவால்னி, லியுட்மிலா
நவால்னி, லியுட்மிலா  ட்விட்டர்
உலகம்

நவால்னி மரணம்: ரஷ்ய அதிகாரிகள் மிரட்டுவதாக தாயார் குற்றச்சாட்டு!

Prakash J

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒருங்கிணைத்து வந்ததுடன், அதிபர் புதினை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 2021-ஆம் ஆண்டுமுதல் அவர் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி அவர் திடீரென சிறையிலேயே மரணமடைந்தார். அவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. நவால்னி மர்மமான முறையில் சிறையில் மரணம் அடைந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நவால்னி மரணம் குறித்து பலரும் சந்தேக கருத்துகளைத் தெரிவித்தனர்.

நவால்னி மரணம் குறித்து அவரது மனைவி யூலியா நவல்னயா “எனது கணவரின் மரணச் செய்தி ரஷ்ய அரசிடமிருந்து வந்துள்ளதால் அதில் எனக்குச் சந்தேகம் உள்ளது. இதுகுறித்த உண்மையை உலகுக்கு வெளிக்கொண்டு வருவேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே நவால்னி குடும்பத்தினரை கலிபோர்னியாவில் சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் பேட்டியளித்த ஜோ பைடன், நவால்னியின் மறைவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, ரஷ்யாவின் பொருளாதாரம் மற்றும் தொழில்துறையை பாதிக்கும் வகையில் பல புதிய தடைகளை விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க... மறுபுறம் நவால்னி மரணத்திற்குப் பின்னர், அதிபர் புதினுக்கு எதிராக ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில், ’நவால்னியின் உடலை ரகசியமாக புதைப்பதற்கு அனுமதிக்கவேண்டும்’ என ரஷ்ய அதிகாரிகள் அழுத்தம் தருவதாக அவரது தாயார் லியுட்மிலா நவல்னயா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர், “நவால்னி உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத அறைக்கு என்னைக் கூட்டிச் சென்றனர். நான் அங்குள்ள ஆவணங்களில் கையெழுத்திட்டேன். ஆனால் தற்போது எனது மகனின் உடலை புதைப்பதற்கு அதிகாரிகள் நிபந்தனை விதிக்கின்றனர். உடலை புதைக்கும் நேரம் உள்பட தாங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.