அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கிருந்து ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14ஆம் தேதி பூமிக்கு திரும்புவதாக இருந்த நிலையில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன்காரணமாக இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 9 மாதங்களுக்கும் (கிட்டத்தட்ட 286 நாள்கள்) மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருந்த நிலையில், அவர்களை மீட்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த பலனும் கிடைக்கவில்லை. இதற்கிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ட்ரம்ப், அதற்கான முயற்சிகளை, அவரது நண்பர் எலான் மஸ்க்கிடம் ஒப்படைத்து பணிகளைத் துரிதப்படுத்தினார்.
இதற்காக, இருவரையும் பூமிக்கு அழைத்து வருவதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் நாசாவும் கைகோர்த்தது. எனினும், அந்தப் பணிகளிலும் சிறுசிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும், இறுதியில், கடந்த மார்ச் 19ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளிவில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து SpaceX-ன் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ், புச் வில்மோர், நிக் ஹேக், அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகிய 4 விண்வெளி வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, சுனிதா வில்லியம்ஸ் நிறைய நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்ததால், அவருக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்படுமா என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “யாரும் என்னிடம் அது குறித்து எதுவும் சொல்லவில்லை. அப்படி இருந்தால் எனது சொந்த பணத்தை கொடுக்க தயார். மேலும், எலான் மஸ்க் மட்டும் இல்லையென்றால் இது சாத்தியமில்லை. அவர் இல்லையென்றால் நீண்ட நாட்கள் விண்வெளியில் அவர்கள் இருந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ”சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 பேரின் மீட்புப் பணிகள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இல்லாமல் சாத்தியமில்லை” என நாசா புகழாரம் சூட்டியுள்ளது. இதுகுறித்து நாசாவின் செய்தித்தொடர்பாளர் பெத்தனி ஸ்டீவன்ஸ், “விண்வெளி வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டது ட்ரம்ப் நிர்வாகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகளில் ஒன்று. அதிபர் ட்ரம்ப் இல்லாமல் இது சாத்தியமில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.