உலகம்

இரண்டு கருந்துளைகள் இணையும் அதிசய புகைப்படத்தை வெளியிட்டது நாசா! 

இரண்டு கருந்துளைகள் இணையும் அதிசய புகைப்படத்தை வெளியிட்டது நாசா! 

JustinDurai

வானில் இரண்டு கருந்துளைகள் இணையும் அரிய நிகழ்வைப் படம்பிடித்துள்ளது நாசா.

உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, வானில் நடக்கும் அரிதான நிகழ்வுகளையும் படம் பிடித்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது வான்வெளியில் இரண்டு மிகப்பெரும் கருந்துளைகள் இணையும் அரிய நிகழ்வைப் படம்பிடித்து, நாசாவின் சந்திரா எக்ஸ் - ரே கண்காணிப்பகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நாசா, 'என்.ஜி.சி 6240' என்ற பால்வெளியில், இரண்டு மிகப்பெரும் கருந்துளைகள் இணையும் நிலையில் இருக்கின்றன. இந்த இரண்டு கருந்துளைகளும் 3,000 ஒளியாண்டு (ஒளி ஓர் ஆண்டில் செல்லும் தொலைவைக் குறிக்கும் ஒரு வானியல் சொல்) இடைவெளியில் இருக்கின்றன. இவை இரண்டும் ஒன்றாக இணைந்து, ஒரு மிகப்பெரிய கருந்துளையை உருவாக்கப் போகின்றன. அது இன்றிலிருந்து பல கோடி ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கருந்துளையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.

நாசா வெளியிட்ட இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கருந்துளை என்றால் என்ன?

1916-ம் ஆண்டு, கருந்துளை என்று ஒன்று இருக்கலாம் என்று அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கணித்தார். அப்போது `கருந்துளை' என்ற பெயர் பழக்கத்தில் இல்லை. 1967-ம் ஆண்டுதான் அமெரிக்க வானியல் ஆய்வாளர் ஜான் வீலர் `கருந்துளை' என்ற பெயரை உருவாக்குகிறார். அதுவரை இருக்கிறதா? இல்லையா? என்ற கணிப்புகளிலேயே இருந்த கருந்துளை முதன்முதலாக 1971-ம் ஆண்டு கண்டறியப்பட்டது.

ஸ்டெல்லர் கருந்துளைகள் (Stellar blackholes), சூப்பர்மேசிவ் கருந்துளைகள் (Supermassive Blackholes) மற்றும் இன்டர்மீடியட் கருந்துளைகள் (Intermediate Blackholes) என கருந்துளையின் அளவைப் பொறுத்து அதை மூன்றாக அறிவியலாளர்கள் பிரிக்கின்றனர்.