உலகம்

மியான்மர் : விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கவிஞர் மரணம்! உடலில் உறுப்புகள் மாயம்!

EllusamyKarthik

மியான்மர் நாட்டில் மக்களால் அமைக்கப்பட்ட ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் ராணுவத்தின் அராஜகம் தலை தூக்கி வருகின்ற நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக தனது கண்டனத்தை கவிதை மூலமாக வெளிப்படுத்தி இருந்தார் 45 வயதான கவிஞர் கெத் தி.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று துப்பாக்கி முனையில் அவரும், அவரது மனைவியும் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். 

“தலையில் சுடுகிறார்கள், ஆனால் புரட்சி எங்கள் இதயத்தில் இருக்கிறது” என கெத் தி எழுதியதற்காக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

இந்நிலையில், விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர், லாக் அப்பில் விசாரணையின் போது தாக்கப்பட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார். 

“அவர் மருத்துவமனையில் இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். விசாரணையில் அவர் தக்கப்பட்டத்தால் கையில் ஏதேனும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். ஆனால் அவர் உடல் அசைவின்றி அங்கு இருந்ததை பார்த்ததும் நான் உடைந்து விட்டேன். அதோடு அவரது உடலில் இருந்த சில உறுப்புகளும் இல்லை” என கவிஞரின் மனைவி தெரிவித்துள்ளார்.