உலகம்

காயம்பட்ட, வழிதவறிய பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாக்கும் புத்தமத துறவி !

jagadeesh

மியான்மரில் புத்தமத துறவி ஒருவர் பாம்புகளை பாதுகாத்து அவற்றுக்கு அடைக்கலம் கொடுத்து வருகிறார்.

மியான்மர் நாட்டைச் சேர்ந்தவர் 69 வயதான புத்தமத துறவி விலாத்தா. இவர் தான் தங்கியிருக்கும் சேக்கா டேட்டோ மடத்தில் பாம்புகளுக்கு தனியாக அடைக்கலம் கொடுத்து பராமரித்து வருகிறார். இந்த முகாமில் மலைப்பாம்பு, கண்ணாடி விரியன், ராஜநாகம் ஆகியவற்றை பாதுகாத்து பராமரித்து வருகிறார். எந்த பயமும் இல்லாமல் இந்த பாம்புகளுக்கு தினமும் அவர் உணவளித்து சுத்தம் செய்தும் வருகிறார்.

இது குறித்து அவர் பேசும்போது "பாம்புகள் இயற்கை சூழலின் ஓர் அங்கம். அவற்றை பாதுகாப்பதை முக்கியமானதாக நான் கருதுகிறேன். பாம்புகளை கண்டால் சிலர் கொன்றுவிடுகிறர்கள் அல்லது மாமிசத்துக்கு விற்றுவிடுகிறார்கள். அதனை தவிர்க்கவே நான் பாம்புகளை பராமரித்து வருகிறேன். பாதுகாக்கவும் பாரமரிக்கவும் மாதம் 300 அமெரிக்க டாலர்கள் செலவாகிறது" என்கிறார் அவர்.

காட்டிலிருந்து காயமடைந்து வழித்தவறி வரும் பாம்புகளுக்கு அடைக்கலம் கொடுத்து மருந்துவ சிகிச்சைகள் செய்யப்பட்ட பின்பு அவற்றை மீண்டும் காட்டுக்குள் விடுகிறார் இந்த புத்தமத துறவி விலாத்தா. கயவர்களிடம் பாம்புகள் சிக்காமல் அதனை பாதுகாத்து வரும் விலாத்தாவின் புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.