உலகம்

ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை

ஜா. ஜாக்சன் சிங்

மியான்மர் ராணுவத்தால் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி கடந்த 2020-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தார்.

எனினும், தேர்தலில் மோசடியில் ஈடுபட்டதாகக்கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு ராணுவம் அவரது ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்தை கைப்பற்றியது. இதையடுத்து, ஆங் சான் சூகியையும் ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில்  வைத்தது.

இந்நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஊழல் வழக்கு ஒன்றில் ஆங் சான் சூகிக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.