உலகம்

கொலம்பியாவில் கனமழையால் நிலச்சரிவு - 16 பேர் உயிரிழப்பு

கலிலுல்லா

கொலம்பியாவில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் 16 பேர் உயிரிழந்தனர்.

ஒரே குடும்பத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 62 வயது மூதாட்டி மட்டும் நல்வாய்ப்பாக இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டார். கொலம்பியாவின் பெரையிரா அருகே காபி தோட்டத்திற்கு புகழ்பெற்ற லா எஸ்நெடா மலைப்பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் ஏழு வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.

மேலும் மூன்று பேரின் கதி என்னவானது என தெரியவில்லை. நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணியில் மண்ணோடு புதைந்திருந்த 62 வயது மூதாட்டி மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மண்ணில் புதைந்த நிலையில், தான் மட்டும் உயிர் பிழைத்தது பெரும் அதிசயம் என அவர் கூறியுள்ளார்.