வடக்கு இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ. இவரது மனைவி டேனியல்லா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மூன்றாவதாகக் கர்ப்பம் தரித்திருந்தார் டேனியல்லா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி. இங்கிலாந்தில் இப்போது கடும்பனிப்பொழிவு என்பதால் சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன. எதிரில் இருப்பது கூட தெரியாத அளவுக்கு கடும்பனி. இதனால் பொதுமக்கள் பெரும் அவதியை சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பிரசவ வலி வந்தால், மனைவியை அழைத்துக்கொண்டு எப்படியாவது மருத்துவமனை சென்றுவிட முடிவு செய்தார். காரில் சென்றுகொண்டிருந்தார். பனி காரணமாக சாலையில் செல்வது கடினமாக இருந்தது. ஏ 66 சாலையில் வண்டியை நிறுத்தி விட்டார். மருத்துவமனையை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தார். ஆனால் அதற்குள் டேனியல்லாவின் வயிற்றில் இருந்து குழந்தை வெளியே வந்துவிட்டது.
ஏற்கனவே தனது இரண்டு குழந்தைகளின் பிறப்பின்போது ஆண்ட்ரு உடன் இருந்ததால் மருத்துவர்கள் என்ன செய்வார் என்பதை தெரிந்து வைத்திருந்தார். அதன்படியே குழந்தையை வெளியே எடுத்தார். அதற்குள் ஆம்புலன்ஸ் வந்துவிட்டது. உடனடியாக அவர்களை அருகில் உள்ள டார்லிங்டன் நினைவு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு தாயும் சேயும் நலம்.
உறைபனியில் பிறந்த அந்தக் குழந்தைக்கு சியன்னா என்று பெயர் வைத்துள்ளனர். இந்தக் குழந்தைக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்காக #A66snowbaby என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஆண்ட்ரு கூறும்போது, ‘கடும் பனியில் சிக்கி திணறிவிட்டேன். மருத்துவமனையை கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. ஏற்கனவே மருத்துவமனையில் நான் பார்த்ததை அப்படியே செய்து குழந்தையை பிரசவித்தேன்’ என்றார்.
ஷேக்டேக்குடன் பிறந்த குழந்தை இதுவாகத்தான் இருக்கும் என்று சிலர் கூறியுள்ளனர்.