உலகம்

லிபியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 130 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

jagadeesh

லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 130 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில் நடக்கும் உள்நாட்டுப் போர், வறுமை போன்றவற்றால் ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறுகின்றனர். இவர்கள், வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவிற்கு வந்து, அங்கிருந்து படகுகள் மூலம் மத்திய தரைக்கடல் வழியே, கிரீஸ், சைப்ரஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுகின்றனர்.

இந்நிலையில், மத்திய தரைக்கடல் வழியே 130 பேர் சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறச் சென்ற போது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த லிபியா கடலோரக் காவல் படை, தண்ணீரில் கவிழ்ந்து கிடந்த ரப்பர் படகை கண்டுபிடித்துள்ளனர். படகைச் சுற்றிலும் மிதந்து கொண்டிருந்த 10 உடல்களை மீட்ட நிலையில், கடல் சீற்றம் காரணமாக எஞ்சியவர்களை தேடும் பணியில் சிக்கல் நீடிப்பதாக லிபியா தெரிவித்துள்ளது.