உலகம்

பிரிட்டனில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு

ஜா. ஜாக்சன் சிங்

நைஜீரியாவில் இருந்த பிரிட்டன் வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்தச் சூழலில், அந்நாட்டில் இருந்து பிரிட்டன் வந்த ஒரு நபருக்கு இந்த நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. குரங்கு அம்மை ஒரு அரிய வகை வைரஸ் தொற்றாக உள்ள நிலையில், இது மனிதர்களிடையே எளிதில் பரவாது என பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் சில வாரங்களில் குணமடையும். இருப்பினும், சில சமயங்களில் இது கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்கு அம்மையால் பாதித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. குரங்கில் இருந்து பரவும் அம்மை நோய், பிரிட்டனில் முதன்முதலில் 2018-ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.