வடகொரியா வோன்சான் பகுதியில் இருந்து 700 கி.மீ தூரம் பறக்கும் பாலிஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்து, தென்கொரியா–அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐ.நா. தடைகள், பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறியும், கிம் ஜாங் உன் அணு மற்றும் ஏவுகணை திறன்களை விரிவுபடுத்தி வருவது உலக சமாதானத்துக்கு புதிய பதற்றத்தை உருவாக்குகிறது.
செய்தியாளர் : ஐடா அருட்செல்வி
எந்த நேரத்தில் எந்த நாடு எந்த நாட்டின் மீது ஏவுகணை வீசும், எந்த நாட்டுக்கு எதிராக போர் தொடுக்கும் என்று கணிக்க முடியாத நிலை தான் உலக அளவில் அண்மை நாட்களில் நீடிக்கிறது. தொடர்ந்து நடக்கும் நவீன ஆயுதத் தயாரிப்புகளும் ஏவுகணை சோதனைகளும் உலக சமாதானத்துக்கு சவால்விடுகிறது என்பது கசப்பான உண்மையே.
அந்த வகையில், வடகொரியா ஒரே வாரத்துக்குள் இரண்டாவது முறையாக பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தவுள்ள கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஏவுகணைச் சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என அண்டை நாடுகள் தெரிவித்துள்ளன.
தென்கொரியாவின் கூட்டுப் படைத் தலைமைத் தளபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி, வடகொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள வோன்சான் நகரிலிருந்து காலை 6 மணியளவில் ஏவப்பட்ட ஏவுகணை, 700 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பறந்துள்ளது. வடகொரியாவின் எந்தவொரு அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணைச் சோதனைகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களுக்கு எதிரானவை என்றும், இதுபோன்ற “ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை” வடகொரியா உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தென்கொரிய அதிபரின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.
வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு ஐ.நா. பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இருப்பினும், 2019-ல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைத் திறன்களை விரிவுபடுத்தும் முயற்சியில் கிம் ஜாங் உன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, தென்கொரியாவும் அமெரிக்காவும் ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ஆண்டுதோறும் நடைபெறும் ‘உல்சி ஃப்ரீடம் ஷீல்டு’ என்ற மிகப்பெரிய கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளன. இந்தப் பயிற்சி தங்களுக்கு எதிரான போருக்கான ஒத்திகை என வடகொரியா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
ஜப்பானும் வடகொரியாவின் ஏவுகணை ஏவுதலைக் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளது. ஆனால், அந்த ஏவுகணை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்குள் விழவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதியும் வடகொரியா குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையைச் சோதித்திருந்தது. மேலும், ரஷ்யாவுடன் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தி வரும் வடகொரியா, பாரம்பரிய நட்பு நாடான சீனாவுடனான உறவையும் சமீபத்தில் மேம்படுத்தி வருகிறது.