இ-சிகரெட்டுகள் பயன்பாட்டினால் புகையிலை நோய்களால் ஏற்படும் மரணங்கள் குறைய வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
புகையிலைப் பொருட்கள் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு நாட்டிற்கும், பிராந்தியத்திற்கும் தகுந்தாற்போல் மாறுப்பட்ட புகையிலை பொருட்கள் அந்தந்த பகுதி மக்களால் பயன்படுத்தப்படுகின்றது. புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உடலுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கேன்சர் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு மரணங்கள் அதிக அளவில் நிகழ்கின்றன.
இந்த நிலையில், உடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இ-சிகரெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. உடலுக்கு சுவையுடன் நிகோடின் மற்றம் பிற வேதிப்பொருள்களைத் தரும் சிறிய சாதனங்களையே இ-சிகரெட்டுகள் ஆகும். இவை பேட்டரியால் இயங்கும் சிறிய சாதனங்கள். எலக்ட்ரானிக் சிகரெட்டுகளை வேப் பென், இ-ஹூக்கா, ஹூக்கா பென் அல்லது வேப் பைப் என்றும் கூறப்படுகிறது. இவை பார்ப்பதற்கு, புகையிலையைக் கொண்ட பழைய சிகரெட், சுருட்டு போன்றே காட்சியளிக்கும்.
சாதாரண சிகரெட்டுகளை நாம் பற்ற வைக்க வேண்டும், அவை புகையை வெளியிடும், ஆனால் இந்த இ-சிகரெட்டுகளை பற்ற வைக்கவும் வேண்டியதில்லை. இவை மீண்டும் நிரப்பக்கூடிய டேங்குகளில் இருந்து நீராவியை வெளியிடுகின்றன. இந்த இ-சிகரெட்டுகள் புகையிலையால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்கும் பயணத்தில், ஒரு சமீபத்திய தொழில்நுட்பம் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். இருப்பினும் இ-சிகரெட்டுகளால் நோய்கள் வர வாய்ப்புள்ளதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றது.
இந்தநிலையில், அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இ-சிகரெட் பயன்படுத்தியவர்கள் மரணத்தை விளைவிக்கும் நோய்களில் இருந்து தப்பித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் வெளியான தகவலின்படி, இ-சிகரெட்டுகள் மூலம் 5 சதவீதம் தான் பாதிப்பு உள்ளது. இதன் மூலம் 2100-ம் ஆண்டிற்குள் 66 லட்சம் பேரின் மரணத்தை தவிர்க்க முடியும் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் புகையிலை முறைக்கு மாற்று இந்த புதிய வகை இ-சிகரெட்டுகள் தான் என்பதை இன்னும் விஞ்ஞானிகள் உறுதி செய்யவில்லை.