microsoft x page
உலகம்

செலவைக் குறைக்க நடவடிக்கை.. 6 ஆயிரம் பேரைப் பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்!

சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Prakash J

கொரோனா பொது முடக்கத்திற்குப் பின் உலகம் முழுவதும் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன. முன்னணி நிறுவனங்கள் பல்வேறு காரணங்களைக் காட்டி ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதில் முக்கியமாக ரோபா மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் பேசப்படுகிறது. இந்த நிலையில், சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தேவையற்ற நிர்வாக ஊழியர்களைக் குறைத்து புதிய தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்வதாகத் தெரிவித்துள்ளது. இதனால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களின் எண்ணிக்கையை அந்நிறுவனம் உறுதியாகக் கூறவில்லை. இந்த நிலையில், அமெரிக்க ஊடகத்தின் அறிக்கையின்படி, சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் 1,985 பேர் வாஷிங்டனைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மைக்ரோசாஃப்ட்

மாற்றமடைந்து வரும் சந்தையில் வெற்றிபெற, நிறுவனத்தைச் சிறப்பாக நிலைநிறுத்த தேவையான மாற்றங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக மைக்ரோசாஃப்ட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.

அதன் கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு வணிகங்களில் வலுவான செயல்திறன் காரணமாக அந்நிறுவனம் வலுவாக உள்ளது. இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொண்டாடுகிறது. 2022ஆம் ஆண்டு ChatGPT அறிமுகப்படுத்தப்பட்டபோது தொழில்நுட்பத்துறை பெரும் பாதிப்படைந்தது. ஆனால் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இரட்டிப்பாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணியில் உள்ளது.