உலகம்

”காலையிலேயே அழுது கொண்டிருப்பேன்.. ஆனால்’ - பில்கேட்ஸ் முன்னாள் மனைவி உருக்கம்!

நிவேதா ஜெகராஜா

பில்கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா, தங்களின் உறவு முறிவு குறித்து மிகவும் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

58 வயதாகும் பில் கேட்ஸ், மெலிண்டா என்பவருடனான தனது 27 வருட திருமண வாழ்க்கைக்குப் பின் கடந்த 2021-ல் பிரிந்தார். இந்தப் பிரிவு குறித்து கணவன் மனைவி இருவருமே தகவல் தெரிவிக்காமல் இருந்த நிலையில், Fortune என்ற ஊடகமொன்றுக்கு மெலிண்டா சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

அந்தப் பேட்டியில், “கொரோனா, தேவையான தனிமையை எனக்காக கொடுத்திருக்கிறது. இருந்தாலும், எப்படி யோசித்தாலும் மிக கொடுமையாக உள்ள இந்த கடினமான சூழலை எதிர்கொள்ள நிறைய தனிமை தேவைப்படுகிறது. நாங்கள் இருவரும் தொண்டு நிறுவனத்தை இணைந்தே நடத்தினோம். அந்தவகையில் என்னுடைய அலுவல் சார்ந்த பிரிவும் எனக்கு அவ்வளவு எளிதாக இல்லை.

நான் விலகிச் செல்லும் நபருடன் நான் தொடர்ந்து பணியாற்றினேன். இதனால் ஒவ்வொரு நாளும் நான் எனது சிறந்த சுயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைக்கு உள்ளானேன். சில நாள்கள் காலை 9 மணிக்கு அழுதுகொண்டிருப்பேன்... பின் 10 மணிக்கு நான் பிரிந்து செல்ல உள்ள நபருடன் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் பேச வேண்டியிருக்கும். அவரிடம் நான் என்னுடைய தனித்துவத்தை காட்ட வேண்டியிருக்கும்.

அப்படியும் நான் செய்துள்ளேன். ஒரு தலைவராக பணியாற்றுபவருக்கு, அது முக்கியமென்றே நான் நினைக்கிறேன். இந்த திருமண உறவில் என்னால் இனியும் இருக்க முடியாது என்று நான் உணர்ந்தேன். அதனாலேயே விலகினேன்” என்றுள்ளார்.

மெலிண்டாவும் பில்கேட்ஸூம், கடந்த 1994-ம் ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர்.