உலகம்

விமானத்தின் அவசரகால கதவை அவசரமாகத் திறந்த போதை இளைஞர்: அதிர்ச்சியில் பயணிகள்

webteam

தாய்லாந்து விமானத்தின் அவசர கால கதவை அவசரமாகத் திறந்த போதை இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் நகரத்தில் இருந்து பாங்காக்-கின் சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்துக்கு தாய் ஸ்மைல் என்ற விமானம் கடந்த வியாழக்கிழமை புறப்படத் தயாராக இருந்தது. விமானத்தில் 80 பயணிகள் இருந்தனர். அப்போது வெளிநாட்டை சேர்ந்த பயணி ஒருவர், வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து சென்று, விமானத்தின் அவசரகால வழியை அவசரமாக திறந்தார். இதில் கதவு முழுவதுமாக திறந்துவிட்டது.

இதனால் மற்றப் பயணிகள் அலறினர். விமானிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, புறப்பட இருந்த விமானம் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.