உலகம்

மோனாலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயற்சி - பெண் வேடமிட்ட நபரால் பரபரப்பு

Veeramani

மூதாட்டி போல் உடையணிந்த ஒருவர் லூவ்ரேயில் உள்ள மோனாலிசா ஓவியத்தை சேதப்படுத்த முயன்றதைக் கண்டு கலை ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் திகைத்துப் போனார்கள்.

சக்கர நாற்காலியில் வந்த மூதாட்டி போல வேடமிட்ட நபர் திடீரென நாற்காலியிலிருந்து குதித்து விக்கை தூக்கி எறிந்துவிட்டு மோனாலிசா ஓவியத்தின் மீது கேக் பூசினார், இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கேக் பூசப்பட்ட ஓவியத்தை பார்வையாளர்கள் புகைப்படம் எடுக்கும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அருங்காட்சியகத்தின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அறையில் அந்த நபர் பாதுகாப்பை மீறி ஓவியத்தை சேதப்படுத்த முயன்றதைக் கண்ட பாதுகாப்புப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை அறையிலிருந்து வெளியேற்றினர்.



அதிர்ஷ்டவசமாக லியனார்டோ டாவின்சியின் புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை பாதுகாக்கும் கண்ணாடியின் மேல் இந்த கேக் பூசப்பட்டது. மோனாலிசா ஓவியம் குறிவைக்கப்படுவது இது முதல் முறை அல்ல. 1956 ஆம் ஆண்டில், மோனாலிசா ஓவியத்தின் மீது ஒருவர் கந்தக அமிலத்தை வீசினார், இதனால் ஓவியத்தின் கீழ் பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதன் காரணமாக, மோனாலிசா ஓவியம் குண்டு துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் வைக்கப்பட்டது. இப்போது இது உலகின் சிறந்த பாதுகாக்கப்பட்ட கலைப்படைப்புகளில் ஒன்றாக உள்ளது.