கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தியாவிடம் இருந்து பெற்ற சுமார் ₹1,250 கோடிக்கும் அதிகமான கடனை மாலத்தீவு அரசு முழுமையாகத் திருப்பிச் செலுத்தியுள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதற்காக ஆன வட்டித் தொகையை இந்திய அரசே ஏற்றுக்கொண்டது.
மாலத்தீவு அதிபரான முகமது முய்சு, பொறுப்பேற்ற நாள் முதல் சீனாவிற்கு நெருக்கமாகச் செயல்பட ஆரம்பித்தார். இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இருப்பினும், 2024இல் அதிபர் முய்சு இந்தியாவிற்கு வருகை தந்தபிறகு, இரு உறவுகளும் சீரானது. இந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு எஸ்பிஐ வங்கி மாலத்தீவில் கருவூலப் பத்திரங்களை வாங்கியதன் மூலம் 150 மில்லியன் டாலர் (சுமார் ₹1,250 கோடிக்கும் அதிகம்) கடன் வழங்கப்பட்டது. இக்கடன் செலுத்தும் கெடு மொத்தம் 6 முறை நீட்டிக்கப்பட்டது. இக்கடனின் அசலை தற்போது மாலத்தீவு அரசு செலுத்தியுள்ளது.
ஜனவரி 2024-இல் முதற்கட்டமாகவும், மே 2026-இல் இரண்டாம் கட்டமாகவும், தற்போது இறுதித் தவணையாக $50 மில்லியனும் செலுத்தப்பட்டு கடன் முழுமையாக முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் அதற்காக ஆன வட்டித் தொகையை இந்திய அரசே ஏற்றுக்கொண்டது. இதற்காக இந்தியா செலுத்திய வட்டித் தொகை மட்டும் சுமார் 45 மில்லியன் டாலர் ஆகும்.
அதேநேரத்தில், இந்த இறுதித் தொகையைச் செலுத்தியதால், மாலத்தீவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $600 மில்லியனுக்கும் கீழே குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் மாலத்தீவு பணவியல் ஆணையத்தின் தரவுப்படி, அந்நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 643.8 மில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், இக்கடன் அடைக்கப்பட்ட பிறகும், மாலத்தீவின் மொத்த வெளிநாட்டுக் கடன் சுமார் $3.59 பில்லியனாக உள்ளது.
இதில் சீனாவுக்குச் செலுத்த வேண்டிய கடன்கள் மற்றும் பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) 2029-30 வரை காலவரையறை கொண்ட $350 மில்லியன் பத்திரங்களும் (Treasury Bonds) அடங்கும். இன்னொரு புறம், மாலத்தீவின் கையிருப்பு குறைந்துள்ளதால் அவசர நிதியாதாரத்திற்கு மீண்டும் சர்வதேச நிதியத்தையோ (IMF) அல்லது நட்பு நாடுகளையோ நாட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. மேலும், உலகளாவிய பொருளாதார மந்தநிலை அல்லது சர்வதேசக் பதற்றங்களால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தால், நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை (Trade Deficit) மேலும் அதிகரிக்கும்.