உலகம்

மலேசியாவில் 2 மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 200+ பயணிகள் காயம்

JustinDurai

மலேசியாவில் இரு மெட்ரோ ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனஸ் இரட்டை கோபுர சுரங்கப் பாதையில் காலிப் பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த மெட்ரோ ரயில் அதே வழித்தடத்தில் 213 பயணிகளுடன் வந்த மற்றொரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 47 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், 166 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், ரயில் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து வந்த தவறான தகவல் தொடர்பு காரணமாக இவ்விபத்து நேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த விபத்து மெட்ரோ அமைப்பின் 23 ஆண்டு கால செயல்பாட்டில் ஏற்பட்ட முதல் பெரிய விபத்து என்று போக்குவரத்து அமைச்சர் வீகா சியோங் கூறினார். மேலும் விபத்துக்கான முழுமையான விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.