உலகம்

மலேசிய பிரதமர் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்..! விறுவிறுவென நடந்த வாக்குப்பதிவு

மலேசிய பிரதமர் மீது குவிந்த குற்றச்சாட்டுகள்..! விறுவிறுவென நடந்த வாக்குப்பதிவு

webteam

மலேசியாவின் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கான நேரம் நிறைவடைந்தது. 

இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று இரவுக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். பஹாங் மாநிலத்தில் உள்ள பிகான் என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பிரதமர் நஜீப் ரஸாக் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இத்தேர்தலில் வெற்றிபெறுவது உறுதி என்று நம்பிக்கை தெரிவித்தார். ரஸாக்கிற்கு கடும் போட்டியாக இருக்கும் எதிர்க்கட்சி கூட்டணியைச் சேர்ந்த 92 வயதான முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, கேடாஹ் மாநிலத்தின் அலோர் சிதார் நகரில் தனது வாக்கினை செலுத்தினார். அப்போது பேசிய மகாதீர், தேர்தலில் வெற்றி உறுதி என்று நம்பிக்கையுடன் கூறினார். 

மலேசியாவில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டை ஆட்சி செய்து வரும் தேசிய முன்னணிக் கூட்டணிக்கு இந்தத் தேர்தலில் பின்னடைவு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மலேசிய அரசியல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரதமர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் பிரதமர் நஜீப் ரஸாக்கின் பின்னணி பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

மலேசியப் பிரதமராகப் கடந்த 9 ஆண்டுகளாகப் பதவி வகித்து வரும் நஜீப் ரஸாக், நாட்டின் இரண்டாவது பிரதமரான அப்துல் ரஸாக் ஹூசைனின் மகன். தந்தை மறைந்த பிறகு நேரடியாக அரசியலில் நுழைந்த ரஸாக் நீண்ட கால அனுபவம் கொண்டவர். 1976ஆம் ஆண்டு 23 வயதாக இருக்கும்போதே தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர். 1982ஆம் ஆண்டில் இருந்து பஹாங் மாநிலத்தில் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். 4 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்த அவர், மகாதிர் முகமது பிரதமராக இருந்தபோது, அவரது தேசிய அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பங்கு பெற்றார். 

அதன் பிறகு 1990ஆம் ஆண்டுகளிலும் பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். 2004-ஆம் ஆண்டில் பிரதமர் அப்துல்லா அகமது படாவி தலைமையிலான அரசில், துணைப் பிரதமராகப் பதவியேற்றார். 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய முன்னணிக்கு பின்னடைவு ஏற்பட்டதால், படாவிக்குப் பதிலாக கூட்டணியின் தலைவராக ரஸாக் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் நாட்டின் ஆறாவது பிரதமராகவும் பதவியேற்றார். அவரது தலைமையில் 2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தேசிய முன்னணி வெற்றி பெற்றது. இதனால் இரண்டாவது முறையாகப் பிரதமராகவும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தனது ஆட்சிக் காலத்தில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் பலவற்றை நஜீப் மேற்கொண்டிருக்கிறார். 

வெளிநாட்டு முதலீடுகளுக்குக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருக்கிறது. ஆயினும் எதிர்கட்சியினர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட கடுமையான வழக்குகளைத் தொடர்ந்ததால், நஜீபின் செல்வாக்கு சர்வதேச அரங்கில் சரியத் தொடங்கியது. இதுபோல், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்தியதற்கும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. சிக்கன நடவடிக்கை என்ற பெயரில், சமூக நலத் திட்டங்களின் நிதியுதவியைக் குறைத்ததால், விலைவாசி உயர்ந்தது. மலேசியாவின் அரசு முதலீட்டு நிறுவனமான 1எம்டிபீ-யில் நடந்த முறைகேடுகளில் நஜீபுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதால், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரின. எதிர்கட்சிகள் திரண்டு போராட்டம் நடத்தின. 

ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்று நஜீப் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போதைய தேர்தலில் அவரது ஆசானான மகாதீர் முகமது எதிர்க்கட்சி வரிசையில் நிற்பதால், இதன் முடிவு சர்வதேச அளவில் உற்று நோக்கப்படுகிறது.