உலகம்

லாட்டரி பணம்தானேனு Exக்கு ஃப்ளாட் வாங்கிக் கொடுத்த கணவன்.. அதிரடியில் இறங்கிய மனைவி!

JananiGovindhan

லாட்டரியில் கிடைத்த பணத்தின் ஒரு பகுதியில் முன்னாள் மனைவிக்கு வீடு வாங்கிக் கொடுத்ததை அறிந்த இரண்டாவது மனைவி, கணவனை விவாகரத்து செய்வதாகச் சொல்லி நீதிமன்றத்தை நாடிய சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது.

ஸோ என்ற பெயரையுடைய அந்த சீனருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லாட்டரியில் 10 மில்லியன் யுவான் கிடைத்திருக்கிறது. அதாவது 12.13 கோடி ரூபாய். இதில் வரிகளெல்லாம் போக அவர் கைவசம் வந்ததோ 8.43 மில்லியன் யுவான். இந்திய மதிப்பில் 10.22 கோடி ரூபாய்.

இந்த தொகையின் முழு விவரம் குறித்து தனது மனைவி லின்னிடம் இருந்து மறைக்க எண்ணிய ஸொ, அதில் 2 மில்லியன் யுவானை (ரூ.2.42 கோடி) தனது மூத்த சகோதரிக்கு அனுப்பியிருக்கிறார். அதில் 7 லட்சம் யுவான் (ரூ.84.93 லட்சம்) பணத்தை எடுத்த ஸொ அந்த தொகையை வைத்து முன்னாள் மனைவிக்கு ஒரு ஃப்ளாட்டை வாங்கி கொடுத்திருக்கிறார்.

இதனை எப்படியோ அறிந்திருந்த மனைவி லின், விவாகரத்துக்கு விண்ணப்பித்ததோடு, ஸொவுக்கும் தனக்குமான சொத்தில் சரிப்பங்கை பிரித்து கொடுக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார். இதுபோக தன்னிடமிருந்து மறைத்து அவரது சகோதரிக்கும், முன்னாள் மனைவிக்கும் கொடுத்த 2.7 மில்லியன் யுவானில் இருந்து மூன்றில் ஒரு பங்கையும் ஸொவிடம் இருந்து வாங்கித் தருமாறு கேட்டிருக்கிறார் லின்.

இது தொடபான வழக்கின் விசாரணை நடந்து வந்த நிலையில், தற்போது ஸொவுக்கு வழங்கப்பட்ட லாட்டரி பணத்தில் அவரது மனைவியான லின்னிற்கும் உரிமை இருப்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறது கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள வென்ஸோ நீதிமன்றம்.

இதனையடுத்து இருவருக்கும் பொதுவான சொத்தை ஸோ அபகரித்ததால், மறைத்து வைத்த பணத்தில் இருந்து 60 சதவிகித ஷேரை லின்னிற்கு கொடுக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.