உலகம்

45 நாட்களில் பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினமா செய்த லிஸ் ட்ரஸ் ! அடுத்த பிரதமர் இவரா?

Abinaya

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் லிஸ் ட்ரஸ். இந்நிலையில் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, தனது பிரதமர் பதவியை ராஜினமா செய்துள்ளார் லிஸ் ட்ரஸ். லிஸ் ட்ரஸ் பதவியேற்று 45 நாட்கள் தான் ஆகும் நிலையில் தனது பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்துள்ளார். நேற்று இங்கிலாந்து உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்த நிலையில் தற்போது பிரிட்டனின் 3வது பெண் பிரதமரான லிஸ் டிரஸும் ராஜினாமா செய்துள்ளார்.

முன்னதாக, பொருளாதாரத்தை மீட்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டில் தான் போரிஸ் ஜான்சன் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது லிஸ் ட்ரஸும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.

பிரிட்டன் பிரதமராக தேர்வான போது பிரிட்டனின் மந்தமான பொருளாதாரத்தை மீட்க உறுதியெடுத்தார் லிஸ் டிரஸ். அதனை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஆனால், லிஸ் டிரஸ் எடுத்த எந்த நடவடிக்கையும் பிரிட்டன் பொருளாதாரத்தை மீட்க உதவவில்லை என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. மேலும், டாலருக்கு நிகரான பிரிட்டனின் பவுண்டின் மதிப்பு தொடர்ந்து குறைந்து, பங்கு சந்தை மதிப்பும் வீழ்ச்சி அடைந்தன.

இதுபல விமர்சனங்களை கிளப்பியதும், போதிய ஆலோசனை வழங்கவில்லை என நிதியமைச்சர் கவாசியை லிஸ் ட்ரஸ் பதவியிலிருந்து நீக்கினார் லிஸ் டிரஸ். அதனை தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்ட அனைத்து வரிச் சலுகைகளும் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும் பிரிட்டனில் புதிய பட்ஜெட் அக்டோபர் 30-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்படிருந்த நிலையில், தற்போது தனது பதவியை ராஜினமா செய்துள்ளார் லிஸ் டிரஸ்.

முன்னதாக கட்சி வாக்காளர்களிடையே அடுத்த பிரதமர் பதவிக்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 55% ரிஷி சுனக்கிற்கு ஆதரவு கிடைத்திருக்கிறது. மேலும் லிஸ் டிரஸுக்கு வாக்களித்தமைக்கு வருத்தம் தெரிவித்ததாகவும் உறுப்பினர்கள் கூறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வீழ்ச்சியில் சிக்கி தவிக்கும் பிரிட்டனை மீட்டெடுப்பது தான் அடுத்து வரும் பிரதமருக்கு முதல் பொறுப்பு.