போர்களின் பூமி என்று அழைக்கப்படும் உக்ரைனின் வரலாற்று பின்னணி குறித்து பார்க்கலாம்.
ஐரோப்பாவிலேயே மிகுந்த ஏழ்மையான நாடு உக்ரைன். அதிக விவசாய நிலங்கள் இருக்கும் நாடு. ரஷ்யாவுக்கு அடுத்து ஐரோப்பாவில் இரண்டாவது பெரிய பரப்பளவு கொண்ட நாடு. 4 கோடிக்கும் மேற்பட்டோர் உள்ளனர். தொழில் புரட்சிக்குப் பிந்தைய நவீன காலத்தில் உக்ரைன் எப்போதும் ரஷ்யாவின் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. கி.பி. ஆயிரமாம் ஆண்டுகளின் தொடக்கத்தில், கீவியன் ரஸ் என்ற பேரரசு உக்ரைனை ஆட்சி செய்தது. தற்போதைய தலைநகரின் கீவ் என்ற பெயர் அதனால் வந்ததே.
தற்போதைய உக்ரைன், பெலாரஸ், போலந்து மற்றும் ரஷ்யாவின் பல பகுதிகளை உள்ளடக்கியதாக கீவியன் பேரரசு இருந்தது. விளாடிமிர் தி கிரேட், அந்தப் பேரரசின் புகழ்பெற்ற அரசர். கீவியன் ரஸ் என்ற பேரரசின் பெயரிலிருந்தே ரஷ்யா என்ற பெயர் உருவானது. 13ஆம் நூற்றாண்டில் மங்கோலியப் படையெடுப்பு கீவியன் பேரரசை வீழ்த்தியது. அதன்பின் போலந்து, லிதுவேனியா, ஆஸ்திரியா, ரஷ்யா ஆகிய நாடுகளின் மன்னர்கள் உக்ரைனைப் பங்கு பிரித்துக்கொண்டார்கள்.
நாட்டின் பெரும்பகுதி போலந்து வசம்போக, அதை எதிர்த்து உக்ரைன் மக்கள் கிளர்ச்சி செய்தனர். பல்லாயிரம் பேர் இறந்த இந்த கிளர்ச்சி 'கொசாக் கிளர்ச்சி' என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படுகிறது. இதை சாதகமாக வைத்துக்கொண்டு, உக்ரைனின் பெரும் பகுதியை ரஷ்ய மன்னர்கள் ஆக்கிரமித்தனர். முதல் உலகப் போரைத் தொடர்ந்து ரஷ்ய கம்யூனிஸ்ட் புரட்சி, அம்மன்னராட்சியை வீழ்த்தியது. அந்த நேரத்தில் உக்ரைன் தலைவர்கள் சிலர் இணைந்து, தனி நாட்டை உருவாக்கினர்.
ரஷ்ய கம்யூனிஸ்ட் ஆதரவுடன் உக்ரைன் 1918ஆம் ஆண்டு தனி நாடாக உருவானது. உக்ரைனில் இருந்த ரஷ்ய மன்னரின் ஆதரவாளர்களுக்கும், கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கும் இடையே போர் மூண்டது. ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்ட இந்தப் போர் 3 ஆண்டுகள் நீடித்தது. உக்ரைன் முழுக்க சோவியத் யூனியனின் கட்டுப்பாட்டில் வந்தது.
சோவியத் யூனியன் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரைன் பகுதியில் உக்ரைனின் மொழி, பாரம்பரியக் கலைகள், பண்பாடு எல்லாவற்றையும் மீட்கும் முயற்சியை அரசே ஆதரித்தது. 1939ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜிப் படைகள் போலந்தை தாக்கின. அதேநேரத்தில் சோவியத் ரஷ்யாவும் போலந்து மீது போர் தொடுத்தது. இரண்டு நாடுகளும் போலந்தை பங்கு பிரித்துக்கொண்டன. போலந்தின் வசமிருந்த உக்ரைன் பகுதிகள் எல்லாம் சோவியத் வசம் வந்தன.
இன்றைய உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ஜெர்மனி படைகள் முற்றுகையிட, சோவியத் படைகள் அவர்களை எதிர்த்துப் போரிட்டன. இரண்டு ஆண்டுகள் போர் புரிந்தும் கீவ் நகரை ஹிட்லரின் நாஜி படைகளால் ஆக்கிரமிக்க முடியவில்லை. இருதரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டன.
கிழக்கு உக்ரைன் மக்கள் சோவியத் ராணுவத்துடன் இணைந்து ஹிட்லர் படைகளை எதிர்த்துப் போரிட்டனர். மேற்கு உக்ரைனில் இருந்த சில குழுக்கள் ஜெர்மன் படைகளுடன் இணைந்து, போலந்துக்கு எதிராக போர் புரிந்தன.
இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றப் பிறகுதான் உக்ரைனில் அமைதி திரும்பியது. அந்தப் போரில் உக்ரைன் பிரதேசத்தில் மட்டுமே 60 லட்சம் பேர் இறந்தனர். போரால் ஏற்பட்ட பஞ்சத்தை காரணமாக வைத்து, உக்ரைனில் இருந்த மக்களில் பலரை சைபீரியப் பிரதேசத்துக்கு அனுப்பினார் ஸ்டாலின். அந்த இடங்களில் ரஷ்யர்களைக் கொண்டுவந்து குடியமர்த்தினார். இப்படித்தான் உக்ரைனில் ரஷ்யாவின் ஆதிக்கம் நிறுவப்பட்டது. ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு சோவியத் யூனியனில் ஆட்சிக்கு வந்தார் நிகிதா குருசேவ். உக்ரைன் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் இருந்தவர்.
இரும்புத்தாதுவும் நிலக்கரியும் அதிகம் இருந்த பகுதி என்பதால், வேகமான தொழில் வளர்ச்சி உக்ரைனில் வந்தது. ஒருகட்டத்தில் ஐரோப்பாவிலேயே பெரிய தொழில் மையமாக உக்ரைன் இருந்தது. சோவியத்தின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் பலர் உக்ரைனில் உருவானார்கள். குருசேவுக்குப் பிறகு சோவியத் யூனியனை ஆட்சி செய்த பிரஷ்னேவ் இங்கிருந்து சென்றவர்தான். 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்தபோது உக்ரைன் தனி நாடாக உருவானது.
சோவியத் யூனியனிலிருந்து 7 லட்சத்து 80 ஆயிரம் படைவீரர்கள் கொண்ட ராணுவமும், அணு ஆயுதங்களும் உக்ரைனுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. உக்ரைன், உலகிலேயே அதிக அணு ஆயுதங்கள் கொண்ட மூன்றாவது வல்லரசாக மாறியது. அணு ஆயுதங்களை வைத்திருக்க விரும்பாத உக்ரைன் எல்லா அணு ஆயுதங்களையும் அழிப்பதற்காக ரஷ்யாவிடம் கொடுத்து, நான்கே ஆண்டுகளில் அணு ஆயுதமே இல்லாத தேசமாகிவிட்டது. உக்ரைன் மக்கள்தொகையில் ஐந்து பேரில் ஒருவர் ரஷ்ய இனத்தவர். நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு ரஷ்ய மொழி பேசத் தெரியும்.
ரஷ்ய ஆதரவாளராக இருந்த உக்ரைன் அதிபர் விக்டர் யனுகோவிச் 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனுடன் இருந்த உறவைத் துண்டித்தார். உக்ரைன் மக்கள் வீதிக்க வந்து போராட, இந்தப் போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிடுவதாக புதின் குற்றம் சாட்டினார். பல மாதங்கள் நீடித்த போராட்டத்தால் விக்டர் அரசு வீழ்ந்தது. விக்டர் ரஷ்யாவுக்கு ஓடினார். இதனால் புதின் உக்ரைன் மீது 2014ஆம் ஆண்டு படையெடுத்தார். அதன் தெற்கில் இருந்த கிரீமியாவை ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டார். அந்த மோதலின் இரண்டாவது கட்டம் தான் இப்போதைய போர்.
- இளங்கோவன்
இதையும் படிக்கலாம்: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை ஏன்? - அதிபர் புடின் விளக்கம்