உலகம்

கணவனின் அஸ்தியுடன் மனைவி எழுதிய செய்தி - 2 வருடத்திற்கு பின் கரை ஒதுங்கிய பாட்டில்

Sinekadhara

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் 2018ஆம் ஆண்டு இறந்த கணவனின் அஸ்தியுடன் அவர் மனைவி எழுதிய செய்தி அடங்கிய பாட்டில் ஒன்று ஸ்பெயினில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கென்டக்கியின் சோமர்செட்டைச் சேர்ந்தவர் மேரி விட். இவரது கணவர் ஜெர்ரி 2018ஆம் ஆண்டு திடீரென இறந்துவிட்டார். அவர் இறந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு, குடும்பத்தினருடன் விடுமுறைக்கு ஃப்ளோரிடாவில் உள்ள டெடோனா கடற்கரைக்குச் சென்ற மேரி, தனது கணவரின் அஸ்தியை ஒரு பாட்டிலில் போட்டு, அதனுடன் ஒரு புகைப்படம் மற்றும் குறிப்பை எழுதி வைத்து அட்லாண்டிக் பெருங்கடலில் வீசியிருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்ட் 13ஆம் தேதி ஸ்பெயினிலிருந்து மேரிக்கு ஒரு மெயில் வந்திருக்கிறது. அதில் ஸ்பெயின் நாட்டின் வடக்கு கடற்கரையில் உள்ள டெ ராசோ கடற்கரையில் அந்த பாட்டிலை கண்டுபிடித்ததாக அந்நாட்டைச் சேர்ந்த அல்வரேஸ் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

பாட்டிலில் இருந்த அஸ்தியை கடலில் கரைத்துவிடும்படி மேரி அந்த குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி அவர்களும் மேரிக்கு அவரது மனதை தொடும் அந்த தருணத்தை வீடியோவாக எடுத்து அனுப்பியுள்ளனர். இது எல்லாருடைய இதயத்தையும் தொட்டது எனவும், இரண்டு குடும்பத்திற்கும் இடையே எதிர்பாராத ஒரு நட்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெர்ரியின் வேலைப்பளு நிமித்தமாக குடும்பத்தினரால் விடுமுறை சுற்றுலா செல்லமுடியாததால் அப்போதுதான் முதன்முறை சென்றதாகவும், ஜெர்ரி எப்போதும் குடும்பம், வேலை, மனைவி, குழந்தைகள் என அன்புடன் இருப்பார் என்றும் ஜெர்ரியின் மகள் எமிலி கூறியிருக்கிறார்.