King Charles III
King Charles III  API
உலகம்

‘பிரிட்டனின் பன்முகத்தன்மை’யை பிரதிபலிக்கும் ஏற்பாடுகளுடன் இன்று முடிசூடுகிறார் மன்னர் 3ம் சார்லஸ்!

PT WEB

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, நாட்டின் புதிய மன்னராக, இளவரசர் சார்லஸ் முடிசூட்டப்படுகிறார். முடிசூட்டுப்பெயராக இனி மூன்றாம் சார்லஸ் என்று அழைக்கப்பட உள்ளார்.

இவரின் முடிசூட்டுவிழா பிரிட்டிஷ் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் விழாவாக நடைபெற உள்ளது. அதாவது வழக்கமாக நடைபெறும் கிறிஸ்துவ முறைப்படி மட்டுமின்றி இந்து, சன்னி - ஷியா முஸ்லீம் (இஸ்லாம் பிரிவுகள்), சீக்கியர், புத்த மதத்தவர், ஜைன மதத்தவர் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் இடம்பெறும் விழாவாக இந்த முடிசூட்டுவிழா நடைபெற உள்ளது.

King Charles

விழாவில்

* இந்துவான லார்ட் நரேந்திர பாஹூபாய் படேல், மன்னர் சார்லஸிற்கு மோதிரத்தையும்

* சீக்கிய மதகுருவான 90 வயது லார்ட் இந்தர்ஜித் சிங், முடிசூட்டுக்கான கையுறைகளையும்

* இஸ்லாமியரான லார்ட் சயீத் கமால் கைவளைகளையும் (bracelet)

* யூதரான பரோனஸ் ஜிலியன் மெரோன் ராஜ மேலங்கியையும் (royal robe)

மன்னருக்கு வழங்க உள்ளனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் இவ்விழாவின்போது பிரிட்டன் பிரதமரும் இந்துவுமான ரிஷி சுனக், புனித பால் (St paul) ஆகியோர் மன்னர் மூன்றாம் சார்லஸிடம் மன்னருக்கு வழங்கப்படும் கடிதத்தை வழங்குவதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட உள்ளது.

கடைசியாக 1953 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டுவிழா நடந்தபோது பெரும்பான்மையினர் கிறிஸ்துவர்களாகவே இருந்தனர். இதனால் அப்போது முழுமையான கிறிஸ்துவ முறைப்படி விழா நடந்தது. 70 ஆண்டுகள் கடந்த பின் அனைத்து மதத்தினரையும் இணைக்கும் வகையில் இன்று விழா நடைபெற உள்ளது.

தற்போது இங்கிலாந்தில் 39 லட்சம் இஸ்லாமியர், 10 லட்சம் இந்துக்கள், சுமார் ஐந்தரை லட்சம் சீக்கியர்கள், 2,98,000 யூதர்கள், 2,73,000 புத்த மதத்தினர் என பல மதத்தினர் வாழ்கிறார்கள். தற்போதைய பிரிட்டனின் பன்முகத்தன்மையை அரவணைக்கும் வகையில் முடிசூட்டு விழா இருக்கவேண்டும் என மன்னர் மூன்றாம் சார்லஸ் விரும்பியதாகவும், அதனாலேயே இந்த விதத்தில் ஏற்பாடுகள் நடைபெறுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்விழாவில் கலந்துகொள்ள உலக நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட 2,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பக்கேற்கிறார்.