உலகம்

கண்ணில்பட்ட நாய்களையெல்லாம் சுட்டுக்கொன்ற கும்பல்.. கத்தாரில் நிகழ்ந்த பயங்கரம்

JustinDurai

கத்தார் நாட்டில் 29 நாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

கத்தார் தலைநகர் தோகாவில் இயங்கிவரும் 'பவ்ஸ் ரெஸ்கியூ கத்தார்' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், தெரு நாய்கள் மற்றும்  காயம்பட்ட, கைவிடப்பட்ட  நாய்களை மீட்டு பராமரித்து வருகிறது. இந்த நிலையில் இங்குள்ள நாய்களில் சில, அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் புகுந்து அங்கிருந்த சிறுவர்களை கடித்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒரு சிறுவனின் குடும்பத்தினர், அந்த தொண்டு நிறுவனத்திற்குள் அத்துமீறி நுழைந்து கண்ணில்படும் நாய்களை எல்லாம் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 29 நாய்கள் பலியாகின. பல நாய்கள் பலத்த காயமடைந்திருக்கின்றன. இதற்கு பிரபலங்கள், நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விலங்குகள் ஆர்வலர் பிராண்ட் ரோனி ஹெலோ கூறுகையில், ''இது காட்டுமிராண்டித்தனமான செயலும், கத்தார் சமூகத்திற்கு அச்சுறுத்தல் தரக்கூடியதும் ஆகும். இதயத்தை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கொலையாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டுள்ளார். கத்தாரில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதையும், பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: ஊழியர்களை நின்றபடியே தூங்கச் சொல்லும் ஜப்பானிய நிறுவனம்.. ஏன்? எதற்காக தெரியுமா?