அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதை இறுதிச்சடங்கு தெஹ்ரானில் தொடங்க, லட்சக்கணக்கானோர் அஞ்சலிக்குத் திரண்டுள்ளனர். கோம், நஜாஃப், கர்பலா வழியாக மஷ்ஹத் வரை பலநாள் ஊர்வலங்கள் நடைபெற உள்ளதால், கூட்ட நெரிசல் மற்றும் வெப்ப அச்சுறுத்தலுக்கிடையில் ஈரான் அவசரத் திட்டங்களுடன் ஆயிரக்கணக்கான கல்லறைகளைத் தயார் செய்துள்ளது.
செய்தியாளர் - M. மீரா
2026 பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரானில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச அதிகார மையமாக விளங்கிய அயதுல்லா அலி காமேனி போரின் முதல் நாளிலேயே கொல்லப்பட்டார். மேலும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில், மத்திய கிழக்கில் போர் தீவிரமாக நீடித்ததால், காமேனியின் இறுதிச்சடங்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அயதுல்லா அலி காமேனியின் அரசு மரியாதையுடன் கூடிய இறுதிச்சடங்கிற்கான நிகழ்வு நேற்று (ஜூலை 4) ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள 'கிராண்ட் மொசல்லா' (Grand Mosalla) வளாகத்தில் காமேனியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகளில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர்.
இறுதிச்சடங்கு ஊர்வலம் புனித நகரமான கோம் (Qom) வழியாகச் சென்று, பின்னர் ஈராக்கின் நஜாஃப் மற்றும் கர்பலா நகரங்களுக்கு அவை கொண்டு செல்லப்படும். இறுதியாக மஷ்ஹத் (Mashhad) நகரில் வியாழக்கிழமையன்று சடங்குகள் நிறைவடையும்; அங்கு அவர் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல நாட்கள் நடைபெறும் இறுதி ஊர்வலங்களில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதால் இதில் 1,500 முதல் 3,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என்பதைக் கருத்தில் கொண்டு ஈரானிய அதிகாரிகள் அவசரக்காலத் திட்டங்களை வகுத்துள்ளனர் என்று ஜெர்மன் நாளிதழான 'டை வெல்ட்' (Die Welt) செய்தி வெளியிட்டுள்ளது.
உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்குகளின் போது ஈரான் அமைதியைக் கடைப்பிடிப்பதாக அறிவித்திருக்கிறது. மேலும் பெரும் கூட்டம் திரண்டிருப்பதும் அதிகமான வெப்பநிலையும் சேர்ந்து ஏதாவது ஆபத்தானவை நடக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால் அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
தெஹ்ரான் முழுவதும் துக்கம் அனுசரிப்பவர்களை ஏற்றிச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகள், பார்வையாளர்களுக்கான தங்குமிடங்களாக மாற்றப்பட்ட பள்ளிகள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றை அதிகாரிகள் திட்டமிட்டு செய்துள்ளனர். கமேனியின் உடல் வைக்கப்பட்டுள்ள மேடையைச் சுற்றி கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மக்கள் 20 நிமிடங்களுக்கு மேல் நிற்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான கோடை வெப்பத்தைத் தணிக்க பிரத்யேக குளிர்விப்பான்கள் (Cooling systems) மற்றும் தண்ணீர் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டு, ராணுவ ஹெலிகாப்டர் மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
சாத்தியமான உயிரிழப்புகள் மற்றும் காணாமல் போனவர்களைக் கையாள்வதற்காக அதிகாரிகள் ஒரு தனிப் பிரிவை உருவாக்கியுள்ளதாகவும், தெஹ்ரானில் இருக்கும் ஒரு கல்லறையில் ஆயிரக்கணக்கான புதிய கல்லறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தி கூறுகிறது.
2020-ல், கெர்மனில் IRGC தளபதி காசெம் சுலைமானியின் இறுதிச் சடங்கின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 56 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 1989-ல் ரூஹோல்லா கொமேனியின் இறுதிச் சடங்கும் குழப்பத்தில் முடிந்தது, அதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதனைக் கருத்தில் கொண்டு அயத்துல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்குக்கு பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.