உலகம்

அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்: கேரள இளைஞர் ஆப்கானில் உயிரிழப்பு

webteam

ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படையினரின் ட்ரோன் தாக்குதலில், கேரள இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் ஐஎஸ் மற்றும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டுப் படையுடன் அமெரிக்க ராணுவமும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் நங்கர்ஹர் மாகாணத்தில் நடந்த அமெரிக்க படையினரின் ட்ரோன் தாக்குதலில் கேரளாவை சேர்ந்த முகமது முஹாசின் என்ற இளைஞர் கொல்லப்பட்டுள்ளார். இவர் மலப்புரம் மாவட்டம் எடப்பல் நகரத்தைச் சேர்ந்தவர். இவருடன் பாகிஸ் தானைச் சேர்ந்த ஐஎஸ் அமைப்பின் கமாண்டர் ஹூஸைபா அல் - பாகிஸ்தானி என்பவரும் கொல்லப் பட்டுள்ளார். இதை அமெரிக்க புலனாய்வு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

முஹாசின் உயிரிழந்த தகவலை, கடந்த 23 ஆம் தேதி, ஐஎஸ் அமைப்பினர் கேரளாவில் உள்ள அவர் குடும்பத்தினருக்குத் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த தொலைபேசி எண்ணில் இருந்து அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு துபாய் சென்ற முஹாசின், அங்கிருந்து, ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து ஆப்கானி ஸ்தான் சென்றுள்ளார். 

கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் இருந்து 39 பேர், ஆப்கான் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளதாகவும் அதில் 15 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. காசர் கோடு, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு, எர்ணாகுளம், திரிச்சூர் பகுதிகளில் இருந்தும் பலர் அந்த அமைப்பில் சேர்ந்துள்ளனர். 

இந்தியாவில் இருந்து அரேபிய நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களை மூளைச் சலவை செய்து அங்கிருந்து ஆப்கானுக்கு அழைத்து செல்கின்றனர் என்றும் தென்னிந்தியாவை சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 59 பேர் இன்னும் ஆப்கானிஸ்தானின் ஐஎஸ் அமைப்பில் இருப்பதாகவும் புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.